மக்கள் தொகை பதிவேடு பணிகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு 2011-ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரமும் தனியாக சேகரிக்கப்படுகிறது. அதில் 14 கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு பணியைத் தொடங்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் ஆயத்தமாகியுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்பிஆர் பணிகள் முழுவீச்சில் நடைபெறவுள்ளன. இதற்கான பணிகள் சிரமமின்றி நடைபெற மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்பிஆர் பணிகளுக்காக மாநில அளவில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன், மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி பணிகளை சுமூகமாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பான உத்தரவை நேற்று முன்தினம் உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான ஆயத்தப் பணிகளுக்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம்டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள்தொகை பதிவேட்டு (என்பிஆர்) பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன.

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளின்போது வீடுகள் கணக்கெடுப்பு பணியும், என்பிஆர் பணிகளும் மேற்கொள்ளப்படும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆயத்தப் பணிகள் குறித்தும், மாநிலங்களில் தற்போதைய நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மக்கள் தொகைப் பதிவேடு பணிகள் தொடங்க தயார் நிலையில் உள்ளன. மீதம் உள்ள மாநிலங்களில் உள்ள நிலை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.