பொய் பரப்பும் ஊடகங்கள்

இரண்டு நாட்களுக்கு முன் ‘உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் கேட்ட இளைஞர் கைது’ பரபரப்பாக செய்தி வெளியிட்டன சன், கலைஞர், விகடன் போன்ற ஊடகங்கள். ஆனால் அதன் பின்னணி என்ன, உண்மை என்ன என்பதை அவர்கள் ஆராயவில்லை. இவர்கள் உண்மை தெரிந்தாலும் அதற்கு மன்னிப்போ மறுப்போ வருத்தமோ தெரிவிக்கமாட்டார்கள் என்பது வேறு விஷயம்.

கடந்த ஏப்ரல் 26 அன்று ட்விட்டரில் சேஷாங்க் யாதவ் என்ற அமேதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டர் உடனடியாக தேவைப்படுகிறது தயவு செய்து உதவி செய்யுங்கள் என்று நடிகர் சோனு சூட்டுக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், என்ன காரணத்திற்காக ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று வேண்டுமென்றே அந்த பதிவில் அவர் குறிப்பிடவில்லை. இதனை அன்கித் என்பவர் பத்திரிகையாளர் ஒருவருக்கும் அனுப்பி வைக்க அந்த பதிவினை அந்த பத்திரிக்கையாளர் அனைவருக்கும் பரப்பிவிட்டார். சிறிது நேரத்தில் இது குறித்து அறிந்த அமேதி நாடாளுமன்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்மிருதி இராணி உடனடியாக சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டார். ஆனால் அவரிடம் இருந்து பதில் ஏதும் இல்லை. இது குறித்து தனது டிவிட்டரில் பதிவிட்ட ஸ்மிருதி இராணி, ‘பாதிக்கப்பட்டவரை உடனடியாக தொடர்பு கொண்டோம் ஆனால் அவர் எங்களது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை, மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்தும் முயற்சி செய்தார்கள் ஆனால் அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை’ என தெரிவித்திருந்தார். சிறிது நேரம் கழித்து தனது நண்பனின் தாத்தா இறந்து விட்டார் என்று அன்கித் என்பவர் மூலம் மேலும் ஒரு டிவிட் பதிவு செய்யப்பட்டது.

இதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது இறந்து போனவர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறக்கவில்லை. மாரடைப்பு காரணமாகவே இறந்துள்ளார் என்றும் மருத்துவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். மேலும் இறந்தவருக்கு ஆக்ஸிஜன் தேவை என்று மருத்துவர்கள் சார்பாக எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். இதுபோன்ற வதந்திகளை பரப்புவது கிரிமினல் குற்றம் என்று காவல்துறையினர் எச்சரித்து டிவிட் ஒன்றை பதிவு செய்தனர். அதில் “விசாரணை நடத்தியபோது அவரது உறவினரின் தாய்வழி தாத்தாவுக்கு 88 வயது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருந்ததாக டாக்டர்கள் தெரிவிக்கவில்லை. வயது மூப்பு காரணமாக இரவு 8 மணியளவில் மாரடைப்பால் இறந்தார். இந்த நேரத்தில் சமூக ஊடகங்களில் இதுபோன்ற அச்சத்தை உருவாக்கும் பதிவுகளை இடுவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, சட்டபூர்வமான குற்றம்’ என பதிவு செய்திருந்தனர்.

கொரோனா தொற்றுடன் உலக மக்கள் போராடி வரும் வேளையில், மக்கள் மத்தியில் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்த வேண்டும், நமது மத்திய, மாநில அரசுகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கில் சிலர் வேண்டுமென்றே சமூக ஊடகங்களில் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் தட்டிக் கொடுத்து பாராட்ட சொல்கிறதா இந்த ஊடகங்கள், இதுதான் இவர்களின் ஊடக தர்மமா?