பைதான் – 5 ஏவுகணை

பாரதத்தின் உள்நாட்டு தயாரிப்பில் உருவான லகு ரக போர் விமானமான தேஜாஸ், பைதான் – 5 என்ற 5ம் தலைமுறை வானில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை (ஏ.ஏ.எம்) பல கட்ட வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு தனது ஆயுத பிரிவில் இணைத்துள்ளது. தேஜாஸில் ஏற்கனவே ஒருங்கிணைந்த டெர்பி பியண்ட் விஷுவல் ரேஞ்ச் (பி.வி.ஆர்) ஏவுகணைகள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் திறனும் இந்த சோதனைகளில் மீண்டும் சோதிக்கப்பட்டன. கடந்த செவ்வாயன்று கோவாவில் நடந்த இந்த ஏவுகணை சோதனையில் மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் பைதான் – 5 அதன் செயல்திறனை உறுதிப்படுத்தி பல தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதே சமயம் டெர்பி ஏவுகணையும் 100 சதவீத துல்லியமாக செயல்பட்டது. இந்த ஏவுகணை தயாரிப்பில் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி, எச்.ஏ.எல் – ஏ.டி.ஆர்.சி டி.ஆர்.டி.ஓ உள்ளிட்ட விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு பல ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்பால் இது சாத்தியமானது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதுடன் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.