உள்துறை அமைச்சர் ஆய்வு

சத்தீஸ்கரில், பிஜாப்பூர் பகுதியில் நக்சல் தளபதி ஹிட்மா சுக்மா, பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது. ஹிட்மாவை வேட்டையாட சென்ற சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினரை 400 பேர் கொண்ட கம்யூனிச நக்சலைட்டுகள் கும்பல் ஒன்று மூன்று புறங்களும் சூழ்ந்து தாக்கி அவர்களது ஆயுதங்களை கொள்ளையடித்துச் சென்றது. இதில் 22 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, புலனாய்வு பணியகத்தின் இயக்குநர் அரவிந்த்குமார் மற்றும் சிஆர்.பி.எப் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். வீரமரணம் அடைந்த ஜவான்களுக்கு அஞ்சலி செலுத்திய உள்துறை அமைச்சர், வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது. அவர்களின் குடும்பத்திற்கு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்தார். மேலும், நக்சலிஸத்திற்கு எதிரான போராட்டம் மேலும் வலுவாகவும் உறுதியாகவும் தீவிரத்துடனும்ன் தொடரும். அதை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் கூறினார். சம்பவம் நடைபெற்ற இடத்தையும் விரைவில் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.