நான்கு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

13 முக்கிய தொழில்துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தவிருப்பதாக நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக ரூ.1 லட்சத்து 97 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே 6 தொழில்துறைகளில் ஊக்கத்தொகை அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏ.சி., எல்.இ.டி. விளக்கு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம், இதற்கான ஒப்புதலை அளித்தது. ‘இதற்காக ரூ. 6 ஆயிரத்து 238 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு 4 முதல் 6 சதவீதம்வரை ஊக்கத்தொகை அளிக்கப்படும். இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம், முட்டுக்கட்டைகளை அகற்றி, உள்நாட்டு உற்பத்தியை உலகத்துடன் போட்டி போடும்வகையில் உருவாக்குவது. எனவே, தற்போது பாரதத்தில் தயாரிக்கப்படாத உதிரிபாகங்களை தயாரிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும். இத்திட்டம் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதுடன், ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும். ஏ.சி., எல்.இ.டி. விளக்கு உற்பத்தி தொழிலின் வளர்ச்சி விகிதம் உயரும். இத்திட்டத்தால், அடுத்த 5 ஆண்டுகளில், ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடி மதிப்புள்ள உற்பத்தி உருவாகும். கூடுதலாக 4 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் இதனால் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.