வாராணசி கியான்வாபி மசூதி சுவரில் தமிழ், தெலுங்கு மொழி கல்வெட்டுகள்: இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை தகவல்

வாராணசியில் உள்ள கியான்வாபி மசூதி சுவரில் தமிழ், தெலுங்கு மொழி கல்வெட்டுகள் இருப்பதாக இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோயில் இந்துக்களின் முக்கியமான புனிதத் தலமாக உள்ளது. இக்கோயிலின் அருகே முஸ்லிம்களின் கியான்வாபி மசூதியும் அமைந்துள்ளது. இது, முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த மசூதி, காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துக் கட்டியதாகப் புகார்களும் உள்ளன. இதுதொடர்பான மீதான வழக்கு பல ஆண்டுகளாக வாரணாசி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இத்துடன், புதிதாக சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கும் தொடுக்கப்பட்டு வாராணசி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கும் மசூதிக்கும் இடையிலுள்ள வளாகச் சுவரில் சிங்காரக் கவுரி அம்மன் சிலை பதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாத இங்கு, அம்மனை தரிசிக்க அனுமதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையின்போது மசூதியினுள் அறிவியல் ரீதியானக் களஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. இதை நடத்திய இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது 839 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. மேலும் மசூதியின் உள்ளே முஸ்லிம்கள் கை, கால்களை கழுவும் இடத்தில் (ஒசுகானா) சிவலிங்கம் இருப்பதும் தெரியவந்தது. இந்த அறிக்கை வழக்கின் இருதரப்பு வாதிகளுக்கும் கடந்த 25-ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், கோயிலை இடித்து மசூதி கட்டியுள்ளதாக ஏஎஸ்ஐ தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் கியான்வாபி மசூதியின் சுவரில் தமிழ், தெலுங்கு மொழி கல்வெட்டுகள் இருப்பதாக இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த, ஏஎஸ்ஐ இயக்குநர் (கல்வெட்டு) கே.முனிரத்னம் ரெட்டி தலைமையிலான நிபுணர்கள் குழுவினர் அங்கு ஆய்வு நடத்தினர். அப்போது மசூதியின் சுவரில் 34 கல்வெட்டுகள் இருந்ததாகவும், அதில் 3 கல்வெட்டுகள் தெலுங்கு மொழியில் உள்ளதாகவும், சில கல்வெட்டுகள் தமிழ், கன்னடம், தேவநாகரி மொழிகளில் உள்ளதாகவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆய்வு அறிக்கையையும் ஏஎஸ்ஐ இயக்குநர் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முனிரத்னம் ரெட்டி கூறியதாவது: இந்த 3 தெலுங்கு கல்வெட்டுகளும் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இதில் நாராயண பத்லு என்பவரின் மகன் மல்லண்ணா பத்லு உள்ளிட்டோரை பற்றி தகவல் எழுதப்பட்டுள்ளது. 1585-ல் காசி விஸ்வநாதர் கோயில் கட்டுமானப் பணிகளை தெலுங்கு பிராமண சமூகத்தைச் சேர்ந்த நாராயண பத்லு என்பவர் மேற்பார்வையிட்டு வந்தார். 15-ம் நூற்றாண்டில் ஜவுன்பூர் பகுதியைச் சேர்ந்த ஹுசைன் ஷார்கி சுல்தான் என்பவர் (1458-1505) காசி விஸ்வநாதர் கோயிலை இடிக்க உத்தரவிட்டு கோயில் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துதான் 1585-ல் கோயில் மீண்டும் கட்டப்பட்டது.
அப்பகுதியை ஆண்டு வந்த ராஜா தோடர்மால், மீண்டும் காசி விஸ்வநாதர் கோயிலை கட்ட உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில்தான் நாராயண பத்லு மேற்பார்வையில் கோயில் கட்டப்பட்டது. கோயில்களை கட்டுவதில் மிகவும் புகழ்பெற்றவராக இருந்தார் நாராயண பத்லு. தற்போது கிடைத்துள்ள கல்வெட்டு களும் இந்த உண்மையை தெளிவுபடுத்துகின்றன.
இந்த கல்வெட்டானது, கியான்வாபி மசூதி சுவரில் உள்ளது. தெளிவாக தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டு சற்று உடைந்த நிலையிலும், முழுமையற்று காணப்பட்டாலும், மல்லண்ணா பத்லு, நாராயண பத்லு பெயர்கள் தெளிவாக உள்ளன.
2-வது தெலுங்கு கல்வெட்டு மசூதியின் உள்ளே கிடைத்தது. இதில் கோவி என்று எழுதப்பட்டுள்ளது. கோவி என்றால் ஆடு மேய்ப்பவர்கள் என்று பொருள். 3-வது தெலுங்கு கல்வெட்டும் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததுதான். மசூதியின் வடக்குப் பகுதியிலுள்ள பிரதான நுழைவுவாயிலில் இந்த கல்வெட்டுக் கிடைத்தது. இதில் 14 வரிகள் உள்ளன. இதில் உள்ள தெலுங்கு எழுத்துகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளன. கோயிலில் இருந்த தூங்கா விளக்குகள் தொடர்பாக கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளன. மற்ற விஷயங்களை அதில் இருந்து பெற முடியவில்லை. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் கல்வெட்டுகளும் கோயிலில் காணப்படுகின்றன. கன்னடம், தேவநாகரி மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளும் அங்கு கிடைத்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.