ராமர் கோவிலில் குவியும் தென்கொரிய பக்தர்கள்

தங்களுடைய தாய் வழி வீடாகக் கருதும் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவிலை பார்ப்பதற்காக, தென்கொரியாவைச் சேர்ந்த பக்தர்கள் குவிந்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை பார்ப்பதற்காக, நாடு முழுதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகின்றனர்.

இந்நிலையில், கிழக்காசிய நாடான தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் கும்பல் கும்பலாக வருகின்றனர்.

அயோத்தியை, தங்களுடைய தாய்வழி ஊராக இவர்கள் பார்க்கின்றனர்.

தென்கொரியாவில் உள்ள சில வரலாற்று ஆவணங்கள் மற்றும் தகவல்களின்படி, 2,000 ஆண்டுகளுக்கு முன், அயோத்தியைச் சேர்ந்த, 16 வயது இளவரசி சுரிரத்னா, படகு வாயிலாக கடலில் பயணம் மேற்கொண்டு, 4,500 கி.மீ., தொலைவில் உள்ள கொரியாவுக்கு சென்றுள்ளார். அங்கு, கொரிய அரசர் கிம் சுரோவை திருமணம் செய்தார். ராணியான சுரிரத்னாவுக்கு, ராணி ஹியோ ஹேவான்காக் என்று பெயரிடப்பட்டது.

இவர், 157 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகவும், 12 குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கரக் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படும், 60 லட்சம் பேர், தற்போது தென்கொரியாவில் உள்ளனர்.

அங்கு, ராணி ஹேவான்காக்குக்கு நினைவிடம் மற்றும் கோவில் உள்ளது.

இதைத் தவிர, அயோத்தியில், சரயு நதிக்கரையில், சுரிரத்னாவின் நினைவாக பிரமாண்ட பூங்கா உள்ளது. கடந்த, 2015ல் பிரதமர் நரேந்திர மோடி, தென் கொரிய முன்னாள் அதிபர் மூன் ஜேயின் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன்படி, அயோத்தியில் உள்ள சுரிரத்னாவின் நினைவிடத்தை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் துவங்கின. கடந்த, 2018ல் இதை, தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்க்சோக், திறந்து வைத்தார். ராணி ஹேவான்காக் நினைவாக, மத்திய அரசு சார்பில், 2019ல் தபால் தலையும் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கரக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு ஆண்டும், அயோத்திக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். தங்களுடைய தாய் வழி ஊரான அயோத்தியில், ராமருக்கு கோவில் கட்டப்பட்டு, அதன் கும்பாபிஷேக விழா நடந்ததை, நேரலையில் பார்த்து மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து, ராமர் கோவிலை நேரில் பார்ப்பதற்காக, குழுக்களாக வரத் துவங்கிஉள்ளனர் தென்கொரிய பக்தர்கள்.