வடபழனி கோவிலில் பக்தர்களுக்கு கொரானா பரிசோதனை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கோயில் நிர்வாகத்திற்கு இந்து அறநிலையத்துறை வலியுறுத்தியுள்ளது. வடபழனி முருகன் கோயிலில் தெர்மாமீட்டர் மூலம் பக்தர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவில் 107 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கோயில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்து அறநிலையத்துறை பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

* கோயில்களின் முக்கிய இடங்களில் கொரோனா வைரசை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு அறிவிப்புகள் அடங்கிய பதாகைகள், சுவரொட்டிகள் வைக்கப்பட வேண்டும்.

* காய்ச்சல் மற்றும் இருமலுடன் வரும் பக்தர்களை கண்டறிந்து அவர்களிடம் அன்பாக எடுத்துரைத்து திருப்பி அனுப்ப வேண்டும். இதற்கென கோயில் நிர்வாகம் சார்பில் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

* மக்கள் தொடக்கூடிய எல்லா இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.

* ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கை கழுவுவதற்கு சோப் வழங்கப்பட வேண்டும்.

* பக்தர்களுக்கு நெற்றியில் விபூதி மற்றும் குங்குமத்தை நெற்றியில் பூசுவதை அர்ச்சகர்கள் தவிர்க்கலாம்.

* மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் உள்ள பெற்றோர்கள் கோயிலுக்கு வராமல் தவிர்ப்பது நல்லது.

* வழிப்பாட்டு பாடல்களுடன் சேர்த்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரமும் பதிவு செய்து ஒலிபரப்பலாம்.

* அடுத்த சில வாரங்களில் கோயில் திருவிழா இருந்தால், அதிகளவில் மக்கள் கூட்டம் இல்லாமல் நடத்தப்படலாம்.

இவ்வாறு இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வட பழநி கோயிலில் பரிசோதனை

இதனையடுத்து வடபழனி முருகன் கோவிலில் பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* கோயிலில் 3 இடங்களில் கொரோனா விழிப்புணர்வு பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

* கோயிலுக்கு வரும் பக்தர்கள் ‘தெர்மாமீட்டர்’ மூலம் சோதனை செய்யப்படுகிறார்கள். உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பக்தர்களின் தகவல்கள், பதிவேட்டில் குறித்து வைத்துக் கொள்ளப்படுகிறது.

* அரைமணி நேரத்திற்கு ஒருமுறை, கிருமி நாசினி, ‘டிஸ்யூ பேப்பர்’ கொண்டு, ‘தெர்மாமீட்டர்’ நன்கு சுத்தம் செய்யப்படுகிறது.

* பழைய விபூதிகள் மாற்றப்பட்டு, புதிய விபூதிகள் வழங்கப்படுகின்றன.

* விபூதி தட்டுகள் மற்றும் பூஜை பாத்திரங்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுகின்றன.

* பக்தர்களின் நெற்றியில் விபூதிகளை வைக்க வேண்டாம் என குருக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

* கோயிலிலுள்ள கைபிடிகள் அனைத்தும், அரைமணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.

* பக்தர்கள் தங்கள் கைகளை கழுவி கொள்ள தண்ணீர் வழங்கப்படுகிறது

* பக்தர்கள் கோயிலுக்குள் வரும் போது, கைகழுவும் இடத்தில் ‘சோப்’ வழங்கப்படுகிறது.