பொய்களின் தலைவர் ராகுல் – பா.ஜ.க பதிலடி

ஆர்.எஸ்.எஸ்.,சின் பிரதமர் பொய் சொல்கிறார் என காங்., எம்.பி., ராகுல், பிரதமர் மோடியை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு, ‘பொய்களின் தலைவர் ராகுல்’ என பா.ஜ., பதிலடி தந்துள்ளது.

மாநிலங்களில், சட்டம் மீறும் வெளிநாட்டவரை அடைத்து வைக்க, தனி அடைப்பு மையங்கள் எதுவும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறுவது, முழுக்க முழுக்க பொய். ஆர்.எஸ்.எஸ்.,சை சேர்ந்த பிரதமரான அவர், பாரத மாதாவிடமே பொய் சொல்கிறார். அசாமில், தனி அடைப்பு மையங்களை, இந்த அரசு உருவாக்கி உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

பொய்களை பரப்பும் ராகுல்:

அதற்கு பதிலடி தரும்விதமாக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா கூறியதாவது: பிரதமர் மோடி பொய் கூறுவதாக, காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார். ஆனால், அவர் தான், பொய்களின் தலைவர். அசாமில் தனி அடைப்பு மையங்கள், மத்தியிலும், மாநிலத்திலும் காங்., ஆட்சி இருந்தபோது தான் அமைக்கப்பட்டன.

‘ரபேல்’ போர் விமானம் தொடர்பாக பொய்கள் கூறியதற்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ராகுல், தற்போது, இந்த விவகாரத்திலும் பொய்களை பரப்பி வருகிறார். என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பின் அடிப்படையில், முஸ்லிம்களை அடைப்பதற்காக, அசாமில் எந்த தனி அடைப்பு மையங்களும் அமைக்கப்படவில்லை என்று தான் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இவ்வாறு ராகுலுக்கு அவர் பதிலடி தந்தார்.