திருப்பாவை – 6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்;

எவ்வாறு நோன்பு நோற்க வேண்டும் என்று முதல் இரண்டு பாடல்களில் விளக்கிய கோதை நாச்சியார் , அடுத்த இரண்டு பாடல்களில் நீர்வளம் மிகுந்து நீர்நிலைகளில் நிலைத்திருக்கும் வண்ணம் நீராதாரம் பலத்துடன் திகழ  வேண்டும் என்று வேணடுகிறார்.்   பின்னர், கண்ணனைப் போற்றி வழிபட்டால் நாம் அடையும் பெருமைகள்…பலன்கள் பற்றிக்  குறிப்பிட்டார்,
புள்ளும் சிலம்பினகாண் எனத் தொடங்கும் இந்தப் பாசுரம்   தொடங்கி அடுத்த பத்து பாசுரங்களில் , தோழியர்களை அணிவகுந்ப்புடன் , திருஅயர்பாடி சிறுமியர்கள் நீராடச் செல்லும் காட்சிகளை நம்கண்மூன்னே விவரிக்கின்றார்.
பொழுது விடிந்ததை உணராமல் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தோழியை எழுப்பும் படலம்   இங்கே உணர்த்தப்படுகின்றது.
பொழுது விடிந்ததால்,புள்ளினங்கள்   தங்களது கூட்டினை விட்டு, உணவினைத் தேடி வெளியே தமக்கேயுரிய ஆரவாரத்துடன் புறப்பட்டுச் செல்கின்றன. பறவைகளின் அரசனான கருடனின் காருண்யம் நிரம்பிய தலைவனின் திருக்கோயிலில், சங்குகள் ஒலிக்கும் ஒலி உனது காதினைச் சென்றுஅடையவில்லையா ?? பெண்ணே நீ எழுந்திரு.
 தாயாக நடித்து நஞ்சு கலந்த பாலினைக் கொடுத்து கொல்ல முயற்சி செய்த பேயான பூதனையின் உயிரினை, பால் உறிஞ்சி குடிப்பது போன்று உறிஞ்சி முடித்தவன்  கண்ணன்; யசோதை பாதுகாப்பாக ஒரு வண்டியின் கீழே வைத்தபோது அந்த வண்டியினில் புகுந்து தன்னைக் கொல்ல முயன்ற சகடாசுரனின், உடல் நொறுங்குமாறு அந்த வண்டியினைத் தனது கால்களால் உதைத்தவன  கண்ணன்; இத்தகைய செயல்களைச் செய்த மாயக்கண்ணன், பாற்கடலில் பாம்பணையில் துயில் மேற்கொள்ளும் திருமால் என்பதை உணர்ந்த ரிஷிகள் மற்றும்  யோகிகளும் , அரி என்றவனைத்   துதிக்கும் குரல்களைக் கேட்கும் எங்களது மனம் மிகவும் குளிர்ந்துள்ளது. நீயும் உனது துயில் கலைத்து ,உடனே எழுந்து அந்தத் துதிகளைக் கேட்டு மனம்  குளிர்க!!