பதிவு செய்யாத பள்ளி விடுதிகள்

சென்னை ராயப்பேட்டையில், பதிவு செய்யப்படாமல் இயங்கி வந்த கிறிஸ்தவ தனியார் பள்ளி விடுதியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அண்மையில் ஆய்வு நடத்தினர். ஆய்வை தொடர்ந்து, அந்த விடுதியில் தங்கியிருந்த சில மாணவிகளை சமூக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீட்டனர். அந்த விடுதியில் மாணவிகளை மதம் மாறும்படி வற்புறுத்துவதால் பிற மாணவிகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழகஅரசுக்கு கடிதம் அனுப்பியது. நடவடிக்கை எடுத்தது தொடர்பாக 3 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் ஆகியோர் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை நேற்று சந்தித்தனர். ராயப்பேட்டையில் உள்ள பள்ளி விடுதியின் நிலை மற்றும் தாங்கள் இதுவரை ஆய்வு செய்துள்ள பிற பள்ளி விடுதி, இல்லங்களின் நிலையை விளக்கி 85 பக்க அறிக்கையை ஆளுநரிடம் வழங்கினர்.