விளையாட்டு வீரர்கள் ஊக்குவிப்பு

மத்திய அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் விளையாட்டுத் துறையை ஊக்குவித்து வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு தேவையான சர்வதேச அளவிலான பயிற்சிகள் அளிக்கவும் ஊக்குவிப்பு, உத்வேகம் அளித்து அவர்கள் லட்சியத்தை அடைந்து தேசத்திற்கு பெருமை சேர்க்கவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் இரண்டு வீரர்கள் வெளி நாடுகளில் பயிற்சி பெற ஒப்புதல் அளித்து அதற்கான அனைத்து செலவுகளயும் மத்திய அரசு ஏற்றுள்ளது.

இளையோர் நீச்சல் போட்டி: நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலக இளையோர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தயாராகுவதற்காக துபாயில் உள்ள அக்வா தேசிய விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறவேண்டும் என்ற நீச்சல் வீரர் ஆர்யன் நெஹ்ராவின் கோரிக்கைக்கு ஒலிம்பிக் பிரிவு இயக்கம் ஒப்புதல் அளித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 18 வயதான ஆர்யன் இந்த பயிற்சியை பெறுவதற்காக ரூ. 8.7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள்  நடைபெறும் பயிற்சி ஆகஸ்ட் மாதம் நிறைவடையும். விமானக் கட்டணம், தங்கும் செலவு, பயிற்சியாளர் கட்டணம், போக்குவரத்து செலவு உள்ளிட்டவை அனைத்தும் இத்தொகையில் அடங்கும். நீச்சல் போட்டியில் கடினமான பிரிவாக கருதப்படும் 1,500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் ஆர்யன் சிறந்து விளங்குகிறார். கடந்த 2017ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் அவர் 5 தங்கப்பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 பேட்மிண்டன் போட்டி: உலகின் முதல் நிலை பேட்மிண்டன் வீரர் விக்டர் அக்சல்சன்னுடன் துபாயில் பயிற்சி பெறவேண்டும் என்ற பாரத பேட்மிண்டன் வீரர் லக்ஷயா சென்னின் கோரிக்கைக்கு ஒலிம்பிக் பிரிவு இயக்கம் ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த மாதம் நடைபெற்ற  தாமஸ் கோப்பை போட்டியில் வென்ற பாரத அணியில் இடம் பெற்ற லக்ஷயா சென், மே மாதம் 29ம் தேதி முதல் ஜூன் மாதம் 5ம் தேதி வரை துபாயில் நடைபெறவுள்ள பயிற்சியில் விக்டர் அக்சல்சன்னுடன் பயிற்சி பெற திட்டமிட்டுள்ளார். பின்னர், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஜூன் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறவுள்ள பயிற்சியிலும் பங்கேற்க முடிவு செய்துள்ளார். லக்ஷயா சென்னின் இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஒலிம்பிக் பிரிவு இயக்கம் ஏற்றுக் கொண்டது.