நம்பிக்கை தரும் ஆய்வு முடிவுகள்

கொரோனா தடுப்பூசி போடுவதற்கும் கொரோனாதொற்று பரவலுக்கும் உள்ள தொடர்பு குறித்த புதிய பொது சுகாதார ஆய்வு இங்கிலாந்தில் நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளின்படி, ‘தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும்போது, ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் மூலம் கொரோனா பரவல் அபாயம் 38 முதல் 49 சதவீதம் குறைகிறது. எந்த தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்களுக்கும் இது பொருந்தும். தடுப்பூசி போட்ட 14 நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கிறது, அதில் வயது வித்தியாசமில்லை என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கின்றன. எனவே, தடுப்பூசி ஒரு டோஸ் போட்டாலே வீடுகளில் 50 சதவீதம் தொற்று பரவல் குறைவது உறுதியாகியுள்ளது. தடுப்பூசிதான் நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் காக்கிறது என்பதற்கு இது சிறந்த சான்று. எனவே, அரசு, தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும்போது மக்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும்’ என்று இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார். எனினும் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள்கூட, தொற்றைத் தவிர்க்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளான கை கழுவுதல், சுகாதாரத்தைப் பேணுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.