அட்டர்னி ஜெனரலாகிறார் முகுல் ரோஹத்கி

மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, வரும் அக்டோபர் 1 முதல் பாரதத்தின் அட்டர்னி ஜெனரலாக திரும்ப பொறுப்பேற்க உள்ளார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முகுல் ரோஹத்கி கடந்த ஜூன் 2014 முதல் ஜூன் 2017 வரை நாட்டின் அட்டர்னி ஜெனரலாக இருந்தார். மூத்த வழக்கறிஞரான ரோஹத்கி, உச்ச நீதிமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் பல உயர் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். 2002 குஜராத் கலவரம் தொடர்பாக ஜாகியா ஜாஃப்ரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்காக (எஸ்.ஐ.டி) அவர் ஆஜரானார் என்பது நினைவு கூரத்தக்கது.  தற்போது அட்டர்னி ஜெனரலாக இருக்கும் கே கே வேணுகோபால், ஜூன் 29ல் அட்டர்னி ஜெனரலாக மூன்று மாதங்களுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார். ஆனால் தனது வயது (91) மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தன்னை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டார். அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.