மடத்தின் நிலம் திருட்டு

மதுரை, மாடக்குளம், நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்திற்கு சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 26 சென்ட் நிலம், 59 ஆண்டுகளுக்கு முன்பே போலி பத்திரம் தயாரித்து, விற்று மோசடி செய்தது தற்போது தெரிய வந்துள்ளது. 1939ல் ஆண்டாள் என்பவர், நந்தவனம் அமைக்க இந்த இடத்தை தானமாக தந்துள்ளார். “கூடலழகர் கோயில் அருகேயுள்ள ஒரு இடத்தை அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் ஆக்கிரமித்தார். அதற்கான சட்ட போராட்டம் நடத்தி, கடந்தாண்டு பிப்ரவரி14ல் அந்த இடம் மீட்கப்பட்டது. இதற்கான ஆவணங்களை தேடியபோதுதான் மேற்குறிப்பிட்ட இடம் இருப்பதே தெரியவந்தது. மாநகராட்சி ஆவணங்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தேடியபோது 1962ல் ஆண்டாள் கையெழுத்திட்டு கொடுத்தது போல போலி பத்திரம் தயாரித்து இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். பின்னர் 1980ல் வேறு சிலருக்கு இடத்தை விற்றுள்ளனர். தற்போது அவ்விடம் 7 பிளாட்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பிளாட்களில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு பிளாட்டில் தொழில் நிறுவனம் உள்ளது. மீதி இடம் காலியாக உள்ளது. இந்த இடத்தை மீட்க மீண்டும் ஒரு சட்டபோராட்டத்தை இந்த 85 வயதில் மேற்கொள்ள உள்ளேன்” என மடத்தின் பிரதிநிதி அப்பாத்துரை தெரிவித்தார்.