கூகுளுக்கு ஐ.என்.எஸ். வேண்டுகோள்

இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐ.என்.எஸ்) கூகுள் இந்தியா மேலாளர் சஞ்சய் குப்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதில், ‘ஆயிரக்கணக்கான செய்தியாளர்களை கொண்டு, பெரும் பணச்செலவில், நாளிதழ்கள் செய்தி சேகரிக்கின்றன. இந்த செய்திகள் நம்பகத்தன்மை உடையதாக இருப்பதால், அதை வெளியிடும் கூகுளுக்கு, நற்பெயர் கிடைக்கிறது. பல ஆன்லைன் ஊடகங்களில் வெளியாகும் பொய் செய்திகள், வெறுப்புணர்வு பிரசாரங்களுக்கு இடையே, நம்பகமான தகவல்களை அச்சு ஊடகங்கள் வழங்கி வருகின்றன. இன்றைய, ‘டிஜிட்டல்’ வெளியில், செய்தித்தாள் விளம்பர வருமானம் கணிசமாக குறைந்துள்ளது. இணையதள விளம்பர வருமானத்தில், கூகுள் நிறுவனம் பெரும் பங்கை எடுத்துக் கொள்கிறது. எனவே, விளம்பர வருமானத்தில், 85 சதவீதத்தை, பதிப்பாளர்களுக்கு கூகுள் வழங்க வேண்டும். பயன்படுத்தப்படும் செய்தித்தாள் செய்திகளுக்கு, கூகுள் பணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.