சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார்

சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியவாதியும் தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், அன்றைய கோவை மாவட்டம், திருப்பூரில் வளமான குடும்பத்தில் பிறந்தார். தந்தை பிரபல வணிகர். சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், திருமணம் செய்துகொள்ளாமல் இறுதிவரை, ஒரு துறவி போலவே எளிமையாக வாழ்ந்து வந்தார். தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கை, குடும்பம், வெற்றிகரமான தொழில் அனைத்தையும் தியாகம் செய்தவர் இவர்.

1930-ல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியைத் தொடங்கினார். பின்னர் பெரியநாயக்கன் பாளையத்தில் 300 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்துக்கு அந்தப் பள்ளியை மாற்றினார். கோவையில் ஒரு ஹோம் சயின்ஸ் கல்லூரியையும் துவங்கினார்.

பாரத விடுதலைப் போராட்ட இயக்கத்தில், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்டப் போராட்டங்களில் பங்கேற்றார். தேசத்திற்காக நான்கு முறை சிறை வாசத்தையும் அனுபவித்தவர் இவர். அக்காலத்தில் தீண்டத்தகாதவர்கள் என ஒடுக்கப்பட்ட மக்களின் நலவாழ்வுக்காக அரும்பாடுபட்டார்.

1934ல் ஹரிஜன நலவாழ்வு நிதிக்காக நன்கொடை திரட்டத் தமிழகம் வந்த காந்தியிடம் ரூபாய் இரண்டரை லட்சம் ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தார். விதவைகள் மறுமணத்துக்காகவும் போராடி வந்தார். 1957-ல் பெண் கல்விக்காக கல்லூரி ஒன்றைத் தொடங்கினார். இவர் எழுதிய திருக்கேதாரம் என்ற பயண நூல் மிகவும் பிரசித்தம். மேலும் பொருளாதாரம், காந்தியின் கல்விக் கொள்கை குறித்தும் எழுதியுள்ளார்.

1946-ல் சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டி. பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் சென்னை மாகாண அமைச்சரவையில் கல்வியமைச்சராகப் பணியாற்றினார். பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு வந்தார். 1946-ல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவினார். சிறந்த விவசாயக் கொள்கை மட்டுமே வெற்றிகரமான தொழில்மயமாக்கலுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்று நம்பினார்.

டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியாரின் பிறந்த தினம் இன்று

  • சக்தி நேசன்