பழி வாங்கப் போறீங்களா?

எத்தனை பேர் என்னை கேலி செய்து இருக்கிறார்கள்? எவ்வளவு வசை பாடி இருக்கிறார்கள்? எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழிவாங்காமல் ஓய மாட்டேன்” என்று ஒரு சாமியார் முன் பொருமினான் ஒரு சீடன். “ஏதாவது மந்திரம் இருந்தால் சொல்லுங்க சாமி” என்றான்.

சாமியார், கோணிப்பை ஒன்றை அவனிடம் கொடுத்தார். “நீ யாரையெல்லாம் பழி வாங்க வேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக் கிழங்கில் ஒரு பெயர் என செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக் கொண்டே வா. நீ போகும் இடம் எல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போ” என்றார்.

“இவ்வளவு தானா? சரி” என்று சீடன் எழுந்து போனான். அன்றிலிருந்து யாரை பழிவாங்க வேண்டும் என்றாலும் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப் பையில் போட்டுக் கொண்டே வந்தான். ஆரம்பத்தில் கோணியை தூக்கித்திரிவது சிரமமாய் தெரியவில்லை. ஆனால் நாளாக, நாளாக அது சுமையாக ஆனது. தூக்குவது சிரமமாகிவிட்டது. சில நாட்களுக்கு பின் அந்த உருளைக் கிழங்குகளிலிருந்து கெட்ட நாற்றம் வர ஆரம்பித்தது. அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள்.

சீடன் மறுபடியும் சாமியாரிடம் வந்தான். “என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே? பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக் கொண்டே வந்தால் அது சுமையாகி விடும், யாரும் பக்கத்தில் வர மாட்டார்கள் என்பதை விளக்கத் தானே இப்படி செய்தீர்கள்?” என்றான் சீடன். சாமியார் சிரித்துக்கொண்டே, சரி. ஆனால் நீ இன்னும் முழுக் கிணற்றை தாண்டவில்லை” என்றார். அவனுக்கு புரியவில்லை.

“அந்த உருளைக் கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமை, நாற்றப் பிரச்சனை தீர்ந்து விடும் என்று நினைக்கிறாய் இல்லையா? மகனே, பிரச்சனை உருளைக் கிழங்கில் இல்லை. கோணிப்பைதான் பிரச்சனை. கோணி இருப்பதால் தானே அதில் உருளை கிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்? எனவே, உனக்கு அந்த நாற்றமும் சுமையும் இல்லாமல் இருக்க வேண்டுமானால், கோணியை முதலில் தூக்கி எறி. உனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள். நீ உன் கடமையை சரியாக செய்து வா.” என்றார்.