கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்

விண்வெளி குறித்த ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் புவிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ள இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில், சீனா இடம் பெறவில்லை. எனவே, தங்களுக்கான தனி விண்வெளி நிலையத்தை அமைத்து வரும் சீனா, அதற்காக லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் 21 டன் எடை கொண்ட முதல் தொகுதியை விண்ணுக்கு அனுப்பியது. இந்த ராக்கெட்டின் பாகம் தற்போது கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றி வருகிறது. அடுத்த சில நாட்களில் எப்போது வேண்டுமானாலும் இந்த ராக்கெட் பாகம் பூமியில் விழக்கூடும் என ’ஸ்பேஸ் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. 100 அடி உயரமும் 16 அடி அகலமும் உடைந்த இந்த ராக்கெட்டின் பாகம் பூமிக்குள் நுழையும்போது, வளிமண்டல உராய்வு காரணமாக எரிந்து சிதைந்து விடும். எனினும் அதிகளவிலான சிதைவுகள் பூமியில் விழக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அது எங்கு, எப்போது விழும் என்பதை கணிக்கக் கூடிய சூழல் தற்போது இல்லை. சீனாவின் ராக்கெட் இது போன்று பூமியில் விழுவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு மே மாதத்தில் சீனாவின் ராக்கெட் வடமேற்கு ஆப்பிரிக்காவில் மவுரித்தேனியா கடல் பகுதியில் விழுந்தது. அதற்கு முன்பாக, 2011ல் சீனா, விண்வெளியில் நிலை நிறுத்திய டியாங்காங்-1 என்ற விண்வெளி ஆய்வு நிலையத்தின் கட்டுப்பாட்டை 2016ல் இழந்தது. அந்த விண்வெளி நிலையம், 2018 ஏப்ரலில் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து வெடித்து சிதறியது. அதன் சிதைவுகள் தென் பசிபிக் கடலில் விழுந்தன.