அறிவுசார் சொத்துரிமை தேவை விழிப்புணர்வு

இன்றைய போட்டி மிகுந்த உலகில் தனிநபராயினும், தொழில் நிறுவனங்க ளாயினும், தங்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், மேலும் சிறப்பாக உயரவும், தங்கள் தயாரிப்பின் அடிப்படையைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. இல்லாவிடில், அதிக முதலீடு செய்யத் திறனுள்ள எவரும், எந்த ஒரு உற்பத்திப் பொருளையும் எளிதாக நகலெடுத்துத் தயாரித்துவிட முடியும்.

இதுபோன்ற சிக்கல்களைத் தடுக்கவே, அறிவுசார் சொத்துரிமை (Intellectual Prortey Right) என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டினுள்ளும், பல நாடுகளுக்கிடையேயும் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான படைப்புக்கும் தனிநபரோ, ஒரு நிறுவனமோ உரிமையைப் பதிவு செய்யலாம். அந்த உரிமை உள்ள தனி நபர் அல்லது நிறுவனத்தின் படைப்பு அல்லது பொருளைப் பயன்படுத்துவோர், அதற்கு உரிமைத் தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இதுவே அறிவுசார் சொத்துரிமைக்கான எளிய விளக்கம்.

உலகமய பொருளாதாரத்தில், அறிவுசார் சொத்துரிமைக்கு பிரதான இடம் இருப்பதால், அண்மைக்காலமாகத் தான் இந்தியாவில் இதற்கான முன்னெடுப்புகள் தீவிரமாக எடுக்கப்படுகின்றன. உலக அளவில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு பெரும் வருவாயை ஈட்டித் தருவனவாக அறிவுசார் சொத்துரிமை தொடர்பான காப்புரிமங்கள் உள்ளன. எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புக்கும் உடனடியாக காப்புரிமம் பெறுவது அந்த நாடுகளில் சுமார் 100 ஆண்டுகளாகவே வழக்கத்தில் உள்ளது. மொபைல் போனில் பயன்படுத்தப்படும் சாதாரண செயலிக்கும் கூட காப்புரிமம் பெறுவது அங்கு ஒரு வர்த்தக நடவடிக்கையாக உள்ளது.

நமது அரசு 1990களுக்குப் பிறகே இதற்கான ஆயத்த நடவடிக்கைகளை எடுத்தது; அப்போதுதான் அதற்கான சட்டங்களும் வடிவமைக்கப்பட்டன. பாரத ரிஷிகள் கண்டறிந்த பூஜ்ஜியம் இல்லாவிடில் இன்று உலக நாகரிக வளர்ச்சியே சாத்தியம் ஆகி இருக்காது. 1 முதல் 9 வரையிலான எண்களும், 10, 100, 1000 என்ற வகையிலான தசமஸ்தானங்களும் இந்தியாவிலிருந்தே உலகம் முழுவதும் சென்றன என்பதை உலகமே தற்போது ஏற்கிறது. அதனால் தான் அறிவியல் வளர்ச்சியும் தொழில் புரட்சியும் உலகில் சாத்தியமாகின. அதற்காக, பாரதம் என்றும் உரிமை கொண்டாடியதில்லை.

ஆனால், உலகில் கண்டுபிடிக்கப்படும் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புக்கும், முன்வைக்கப்படும் எந்தவொரு புதிய சிந்தனைக்கும் இந்தியர்கள் பயன்பாட்டின் போது அதற்கான உரிமத் தொகையை நாம் அறியாமலே அளித்து வருகிறோம். எனவே, இந்தப் போட்டி மிகுந்த, தாராளமய உலகில், இந்தியாவின் சிந்தனைச் செல்வாக்கும் வர்த்தகச் செல்வாக்கும் உயர வேண்டுமானால், நாமும், அறிவுசார் சொத்துரிமை விஷயத்தில் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். ஒரே நாட்டினுள்ளும் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு பதிவு அலுவலகங்கள் உள்ளன. சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நான்கு இடங்களில் காப்புரிமை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

தொழில்நுட்பப் பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் எந்த ஒரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமம் ((Patent) பெற முடியும். ஒரு கண்டுபிடிப்பு முயற்சியில் இறங்குவதற்கு முன்னதாகவே, அது ஏற்கெனவே பிறரால் கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளவும் முடியும். இந்தியக் காப்புரிமை இணைய தளமான www.ipindia.nic.in தளத்தின் மூலமாக, இதனைத் தெரிந்துகொள்ளலாம். உலகம் முழுவதும் உள்ள காப்புரிமை இணையதளங் களிலும் இதனைத் தெரிந்துகொள்ளலாம்.

1. பதிப்புரிமை (Copyright)
பதிப்புரிமை (Copyright) என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது மூலப் படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும். இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துவதையும் உள்ளடக்கியது. கதை, கவிதை, நாடகம், கட்டுரை, நூல் போன்ற படைப்புகள் மட்டுமல்லாது, மென்பொருள் வடிவமைப்பு, கட்டடக்கலை வடிவமைப்பு, நிலப்படம், புகைப்படம், கிராபிக்ஸ் கலை, ஒளி- ஒலிப்பதிவுகள், இசை, ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைப்படைப்புகள், திரைப்படம், கணினி நிரல், தரவு சேமிப்புகள் போன்றவையும் படைப்பூக்கத்
தால் உருவாகுபவை என்பதால், அவையும் பதிப்புரிமைக்கான பட்டியலில் வருகின்றன.அண்மையில் ‘அந்நியன்’ திரைப்படத்தின் கதைக்கரு யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சை அதன் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையில் நிகழ்ந்தது பலருக்கும் தெரிந்திருக்கும். இதுபோன்ற சர்ச்சையில், காப்புரிமைச் சட்டங்களின் அடைப்படையில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும்.

2. வணிகச் சின்னம் (Trademark)
ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்பவர் அதற்கு ஒரு பெயரிடுவது அவசியம். அதே பெயரை மற்றொருவர் பயன்படுத்துவது வர்த்தக நாணயமாகாது. அதேசமயம், புதிய பொருளைத் தயாரிப்பவருக்கும் தனது பொருளின் பெயரைக் காக்க வேண்டிய கடப்பாடு உண்டு. அதற்காக அவர் செய்ய வேண்டியது வணிகச் சின்னப் பதிவாகும். வணிகச் சின்னம் என்பது, ஒரு வார்த்தையாகவோ, அல்லது சொற்றொடரா கவோ, அடையாளச் சின்னமாகவோ, ஒரு வடிவமைப்
பாகவோ, இவை அனைத்தின் ஒருங்கிணைப்பாகவோ இருக்கலாம். உதாரணமாக, கோவையில் இயங்கும் லட்சுமி மெஷின் வொர்க்ஸ் நிறுவனம் தனது வணிக அடையாளச் சின்னமாக கோட்டமைப்பில் வரையப்பட்ட லட்சுமியின் உருவத்தைக் கொண்டிருக்கிறது. அந்த வணிகச் சின்னமே, ஐம்பதாண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்ட அந்த நிறுவனத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.இந்தியாவைப் பொருத்தவரை, அறிவுசார் சொத்துரிமைகளில் அதிக எண்ணிக்கையில் பதிவாகுபவை வணிகச் சின்னங்களே. ஊடக விளம்பரங்களில் இவையே பிரதானமாக கவனிக்கப்படுகின்றன.

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இரு ஜவுளி விற்பனை நிறுவனங்களிடையிலான வர்த்தகப் போட்டி நீதிமன்றம் வரை சென்றது. சென்னையில் ஏற்கனவே குமரன் சில்க்ஸ் என்ற பெயரில் ஒரு ஜவுளிக்கடை வணிகச் சின்னத்துடன் இயங்கி வந்த நிலையில், கோவையைச் சேர்ந்த மற்றொரு குமரன் சில்க்ஸ் சென்னையில் கடையைத் துவங்கியபோது, அதற்கு எதிராக வழக்கு தொடுத்து, சென்னை நிறுவனம் வென்றது. ஆனால், அந்தத் தடையே ‘தி சென்னை சில்க்ஸ்’ என்ற புதிய வணிக சின்னம் உருவாகவும் தமிழகம் முழுவதும் அந்நிறுவனம் பரந்து விரியவும் காரணமானது.

3. படைப்புரிமம்/காப்புரிமம் (Patent)
எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புக்கும் பதிப்புரிமம் அல்லது காப்புரிமம் பெறுவது அவசியம். இல்லாவிடில் அதை நகலெடுத்து தனது கண்டுபிடிப்பாக வேறு யாரேனும் சொந்தம் கொண்டாட முடியும். அதனால், பெரும் உழைப்பையும் நிதியையும் செலவிட்டுக் கண்டறிந்த பொருள் மீதான உரிமையை அதன் கண்டுபிடிப்பாளர் இழக்க நேரிடும். புதிய கண்டுபிடிப்பு அல்லது தயாரிப்பின் முழு விவரத்தை, தகுந்த ஆதாரங்களுடன் பதிப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்தால் பதிப்புரிமை வழங்கப்படும்.
அண்மையில் அமெரிக்காவில் சாம்சங் நிறுவனத்துக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கும் இடையே அவர்களது மொபைல் போன் தயாரிப்பு தொடர்பான பதிப்புரிமைச் சச்சரவு நிகழ்ந்தது பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் தயாரிப்பில் உள்ல பல தொழில்நுட்பங்களை சாம்சங் நகலெடுத்துவிட்டது என்பதே குற்றச்சாட்டு. தனது ஐ-போன் தொழில்நுட்பத்துக்கு ஆப்பிள் பதிப்புரிமை பெற்றிருந்ததால், அந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்துக்கு பல கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தியாவைப் பொருத்தவரை, நமது நாட்டின் முதல் காப்புரிமம் பெற்றவர் விஞ்ஞானி ஜகதீச சந்திர போஸ். 1904-ம் ஆண்டு, தனது ‘மின் குறுக்கீடுகளைக் கண்டறிதல்’ என்ற ஆய்வு முடிவை அமெரிக்காவில் பதிவு செய்து, அதற்கு காப்புரிமை (யுஎஸ்755840ஏ) பெற்ற போஸ், அதன் மூலம், ‘இந்தியாவின் முதல் காப்புரிமை பெற்ற விஞ்ஞானி’ என்ற பெருமையைப் பெற்றார். அவர் காப்புரிமை பெற்றதே ஒரு சுவையான வரலாறு.
ஆனால், போஸ் முதலில் தனது கண்டுபிடிப்புகள் பலவற்றுக்கு காப்புரிமம் பெறாமல் இருந்தார். தனது கண்டுபிடிப்பால் வர்த்தக லாபம் அடைய அவர் விரும்பவில்லை. எனினும் சகோதரரி நிவேதிதையின் வற்புறுத்தல் காரணமாகவே அவர் தனது கண்டுபிடிப்புக்கு அமெரிக்காவில் காப்புரிமம் பெற்றார். அதற்கு முன், ரேடியோ அலைக்கதிர்கள் குறித்த கண்டுபிடிப்பை முதன்முதலில் போஸ்தான் நிகழ்த்தினார். ஆனால் அதனை அவர் முறையாகப் பதிவு செய்யாததால், மார்கோனி என்பவர் அந்தப் பெருமையைத் தட்டிச் சென்றுவிட்டார் என்பதை நாம் உணர வேண்டும்.

4. புவிசார் குறியீடு (Geographical Indication)
1998ம் ஆண்டு, ரைஸ் டெக் என்ற அந்த அமெரிக்க நிறுவனம், வாசனையுள்ள அரிசி ரகம் ஒன்றை தன் ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு ‘டெக்ஸ் ரைஸ்’ என்று பெயர் சூட்டி இருப்பதாகவும் அமெரிக்காவில் காப்புரிமை கோரியிருந்தது. அது வேறெதுவும் இல்லை, இந்தியாவில் விளையும் பாசுமதி அரிசி ரகம் தான். அமெரிக்க நிறுவனத்தின் வஞ்சக வர்த்தகத் திட்டத்தை அறிந்த இந்திய அரசு உடனே களத்தில் இறங்கியது. இந்திய தொழிலக அறிவியல் ஆராய்ச்சி அமைப்பான சி.எஸ்.ஐ.ஆரின் தலைவர் ரகுநாத் ஆனந்த் மஷேல்கரை அதற்காக நியமித்தது. மஷேல்கர், சர்வதேச அளவிலும் அமெரிக்காவிலும் அதற்கான சட்டப் போராட்டங்களை நடத்தினார். அதன்மூலமாக பாசுமதி அரிசி மீதான நமது உரிமை நிலைநாட்டப்பட்டது.

இந்த பாசுமதி அரிசிக்குத் தேவையான தட்ப வெட்ப நிலை இந்தியாவில் மட்டுமே இருப்பதையும், இந்திய / பாகிஸ்தான் மண்ணுக்கே மட்டுமே பிரத்யேகமான ரகம் இது என்பதையும் அவர் ஆதாரப்பூர்வமாக நிலைநாட்டினார். அதன்மூலமாக பாசுமதி அரிசி மீதான நமது உரிமை நிலைநாட்டப்பட்டது. புவியியல் சார்ந்த குறியீடு (Geographical indication, GI) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித் தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடு. குறிப்பிட்ட உற்பத்திப் பொருள், முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தைக் காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக் கொள்ளலாம். மதுரை மல்லி, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, திருப்பதி லட்டு போன்றவை புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன. எனவே இவற்றை வேறு நாடுகளிலும் வேறு இடங்களிலும் யாரும் தயாரிக்க முடியாது.பண்ருட்டி பலாப்பழம், காஞ்சிபுரம் பட்டுப்புடவை, மார்த்தாண்டம் தேன், மணப்பாறை முறுக்கு, பவானி ஜமுக்காளம், சுவாமிமலை வெண்கலச் சிலைகள், சிவகாசி பட்டாசு, கோவில்பட்டி கடலை மிட்டாய், சேலத்து மாம்பழம், பத்தமடைப் பாய் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ள சில பொருட்கள்.

5.வர்த்தக ரகசியம்- (Trade Secret)
ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் பட்டியல், அதன் போட்டி நிறுவனத்துக்கு எந்தளவுக்குப் பயன்படும் என்பதை அனைவரும் அறிவர். எனவேதான் அவை ரகசிய மாகப் பேணப்படுகின்றன. எனினும் நிறுவனத்திலிருந்து விலகி போட்டி நிறுவனத்தில் சேர்பவர் மூலமாக அந்தப் பட்டியல் வெளியாகலாம்; அதனால் அந்த நிறுவனம் நஷ்டமடையலாம். தனது வாடிக்கையாளர் பட்டியலை வர்த்தக ரகசியமாக அந்த நிறுவனம் பதிவு செய்திருக்குமானால், அதனை கசியச் செய்தவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க முடியும்.

கோகோ கோலா பானங்களின் தயாரிப்பு மூலப்பொருள் ரகசியம் அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ள நால்வருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதுவே அந்த பானத்தின் விற்பனை தளராமல் தடுக்கிறது. இதுவே வர்த்தக ரகசியம். இதை முறைப்படி பதிவு செய்துவிட்டால் அறிவுசார் சொத்துரிமை ஆகிவிடும். ஒரு பொருளைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள் சேர்க்கை, வடிவமைப்புகள், தொழில்நுட்பங்கள், பதப்படுத்தும் முறைகள், உற்பத்திச் செயல்முறைகள் போன்றவை வர்த்தக ரகசியத்தின் கீழ் வருபவை.

கோலா நிறுவனத்துக்கு ஒற்றை ஆளாக சவால் விடும் தமிழகத்தின் காளி மார்க் குளிர்பானங்களின் (குறிப்பாக பொவன்டோ) ரகசியத்தை அறிய பல வெளிநாட்டு நிறுவனங்கள் முயன்றதை அறிவோம். அத்தகைய சூழலில், வர்த்தக ரகசியத்தை அரசுரீதியாகப் பதிவு செய்வது மிகவும் அவசியம். நமது கல்வி நிறுவன மாணவர்கள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து பதிவு செய்தால் நமது நாட்டுக்கும் பெருமை சேரும். அதற்கான முனைப்புகளில் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வேண்டும்.

இந்திய விஞ்ஞானி அருண் நேத்ராவளி அமெரிக்காவின் பெல் லேபாரட்டரிஸ் நிறுவனத்தில் கண்டறிந்த உயர் வரையறு தொலைக்காட்சி தொழில்நுட்பம் (ஹெச்.டி. டெலிவிஷன்) அவரை உலக அளவில் புகழ் பெறச்செய்தது. 70க்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்காக காப்பு ரிமங்கள் பெற்றுள்ள அவரால் இந்தியாவைவிட அமெரிக்காவே அதிக லாபம் அடைகிறது. இந்த நிலையை மாற்ற இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களும் ஆராய்ச்சிக்கு கூடுதல் செலவிட்டு, அதிக கவனம் செலுத்தவேண்டும். அதன்மூலம் நமது மாணவர்களின் அறிவுத்திறன் மடைமாறிச் செல்வது தடுக்கப்பட்டு, இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமைகள் பெருகும்.