சென்னையில் பொது சுகாதார பள்ளி

சென்னை ஐயப்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு (ஐ.சி.எம்.ஆர்) தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில், ஐ.சி.எம்.ஆர் பொது சுகாதார பள்ளியின் புதிய கட்டிடத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய மன்சுக் மாண்டவியா, ‘நாட்டில் பொதுப் பணியாளர்களின் எண்ணிக்கையை பொது சுகாதாரப் பள்ளி அதிகரிக்கும். நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முன்னணியில் உள்ள ஐ.சி.எம்.ஆரின் முயற்சிகளை இந்த நடவடிக்கை மேலும் வலுப்படுத்தும்’ என்றார்.

மேலும், பெருந்தொற்று நெருக்கடியின் போது பாரதத்தின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், ‘உள்நாட்டுத் திறன் மேம்பாடு, மனித வளம், தடுப்பூசி என எதுவாக இருந்தாலும், சுகாதார உள்கட்டமைப்பை பாரதம் வேகமாக அதிகரித்து வருகிறது. உலக அளவில் பாரதத்தின் நிலையை இது உயர்த்தியுள்ளது. இன்று, பல நாடுகள் பாரதத்தின் தடுப்பூசிகளை நாடுகின்றன. இது பெருமையளிக்கும் விஷயம்’ என்று கூறினார்.

சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளரும் ஐ.சி.எம்.ஆர் தலைமை இயக்குநருமான பேராசிரியர் பத்மஸ்ரீ பல்ராம் பார்கவா அடிக்கல் நாட்டு விழாவிற்கு தலைமை வகித்தார். தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.