புர்கா அணியத் தடை

கடந்த 2019ல் இலங்கை, கொழும்புவில் நடத்தப்பட்ட தேவாலய தொடர் குண்டுவெடிப்புகளில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது தற்காலிகமாக இலங்கையில் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்கப்பட்டது. தற்போது அதனை நிரந்தரமாகத் தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா கூறுகையில், ‘தீவிரவாத தடுப்புச் சட்டத்தை அதிகாரிகள் பயன்படுத்த உள்ளனர். மதரீதியான பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் அணியும் புர்கா நாட்டின் பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த புர்கா உடை சமீபத்தில்தான் இலங்கை பெண்கள் அணிகிறார்கள். இதற்கு முன் இலங்கையில் இருந்த முஸ்லிம்கள் யாரும் புர்கா அணிந்தது இல்லை. இது ஒருவகையான மதரீதியான பயங்கரவாதத்துக்குத் துணை போவதாகவே நினைக்கிறோம். விரைவில் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்க முடிவெடுப்போம். அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும் தடை விதிக்கப்படும். அதேபோல, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதரஸாக்கள் செயல்படவும் தடை விதிக்கப்படும். யார் வேண்டுமானாலும் பள்ளிகள் தொடங்கலாம், என்ன வேண்டுமானாலும் கற்பிக்கலாம் என்று இருப்பதையும் அனுமதிக்க முடியாது. எங்கள் நாட்டுக்கென தனியான தேசியக் கல்விக் கொள்கை இருக்கிறது’ என தெரிவித்தார்.