பா.ஜ.க தேர்தல் அறிக்கை

கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. அவ்வகையில், கர்நாடகாவின் ஆளும் கட்சியான பா.ஜ.க, பல வாக்குறுதிகள் அடங்கிய தனது தேர்தல் அறிக்கையை ‘பிரஜா பிராணாலிகே’ என்று பெயரில் நேற்று வெளியிட்டது. இதனை, பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா வெளியிட்டார். நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கர்நாடகாவில் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம், உற்பத்தி துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், பெங்களூருவை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவது உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் வழங்கப்பட்டுள்ளது. ‘சர்வார்கு சுரு யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் நவீனமயமாக்கப்படும். ‘அடல் ஆஹார் கேந்திரா’ என்ற பெயரில் அனைத்து மாநகராட்சிகளிலும் ஒரு கேண்டின் என்ற வகையில் அமைத்து மலிவு விலையில் சத்தான உணவு வழங்கப்படும். ‘போஷ்னே’ திட்டம் மூலம் மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினமும் அரை லிட்டர் நந்தினி பாலும் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அரசி மற்றும் 5 கிலோ சிறுதானியமும் இலவசமாக வழங்கப்படும். மாநிலத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். யுகாதி, விநாயர்கர் சதூர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகை கால மாதங்களில் மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் வருடத்திற்கு மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். பட்டியல் சமூகத்தினருக்கு ரூ. 10 ஆயிரம் நிரந்தர வைப்பு தொகையாக 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். பழமையான கோயில்களை புனரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலத்தில் வசிக்கும் வெளிநாட்டு சட்டவிரோத குடியேறிகளை அப்ப்புறப்படுத்த கர்நாடக குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும். மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க காவல்துறையில் புதிய பிரிவு உருவாக்கப்படும். யு.பி.எஸ்.சி, வங்கித் தேர்வு போன்ற போட்டித்தேர்வுகளுக்கு தயாரகும் நபர்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்படும். பெங்களூரு நகரம் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படும். பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களின் வாழ்வை எளிமையாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.