ஸயாமா பிரசாத் முகர்ஜியின் கனவு நிறைவேறியது

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட வேண்டுமென்ற பாஜகவின் முன்னோடி இயக்கமான பாரதிய ஜனசங்கத்தை நிறுவிய ஸயாமா பிரசாத் முகர்ஜியின் கனவு இப்போது நிறைவேறியுள்ளது.

ஜவாஹர்லால் நேரு தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் நேருவின் நிலைப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து பாரதிய ஜனசங்கத்தை நிறுவினார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தேச ஒருமைப்பாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்தும் என்றும், 370-ஆவது சட்டப் பிரிவு தேசநலனுக்கு எதிரானது என்றும் தொடக்கத்தில் இருந்தே கூறி வந்தார். சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தார்.

1952-ஆம் ஆண்டு தனது கருத்தை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசினார். ஒரு நாட்டுக்கு இரு அரசியலமைப்புச் சட்டங்கள், இரு கொடிகள் இருக்கக் கூடாது என்பது அவரது கருத்தாக இருந்தது. அவரது எண்ணம் இப்போது நிறைவேறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று சியாமா பிரசாத் முகர்ஜி வலியுறுத்தியதை இப்போதைய மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. பிற இந்தியக் குடிமக்கள் காஷ்மீரில் நிரந்தரமாகக் குடியேறக் கூடாது; காஷ்மீர் செல்லும்போது அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து கடந்த 1953-ஆம் ஆண்டு சியாமா பிரசாத், காஷ்மீர் சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்றார். காஷ்மீர் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், அதைமீறி காஷ்மீர் செல்ல முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தடுப்புக்காவலில் இருந்தபோதே அவர் உயிரிழந்துவிட்டார்.