விஜயதசமி பண்டிகை – சிறப்பு விருந்தினராக ஹெச்சிஎல் நிறுவனர் சிவ் நாடாருக்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு

ஆர்எஸ்எஸ் சார்பில் அதன் தலைமை அலுவலகத்தில் வரும் அக்டோபர் 8-ம் தேதி நடக்கும் விஜயதசமி பண்டிகைக்கு சிறப்பு விருந்தினராக ஹெச்சிஎல் நிறுவனர் சிவ் நாடாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவின் போது ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பேச்சும், சிறப்பு விருந்தினர்களாக யார் அழைக்கப்படுகிறார்கள் என்பதும் அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு விஜயசதமி பண்டிகை வரும் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் நடக்கும் விழாவுக்கு ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சிவ் நாடார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட உள்ளார் என்று ஆர்எஸ்எஸ் நாக்பூர் மகாநகர் சங்கசாலக் ராஜேஷ் லோயா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு விஜயதசமி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நோபல் பரிசு பெற்றவரான கைலாஷ் சத்தியார்த்தி அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு இருந்தார்.