விசாரணை செய்ய சிபிஐக்கு தடை

தங்கக் கடத்தல், மசாலா பாண்ட் ஊழல், அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு, அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் என பல்வேறு முறைகேடு புகார்கள்.

சபரிமலை விவகாரம், நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் தோழர்கள், பயங்கரவாத ஆதரவு போக்கு என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியுள்ள கேரள கம்யூனிச அரசு ஏழைகளுக்கு வீடு கட்டும் ‘லைப் மிஷன்’ திட்ட முறைகேட்டிலும் ஈடுபட்டுள்ளது. இதில் பெருமளவு ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியது.

இதனால் ஏற்கனவே சந்தி சிரிக்கும் தங்கள் ஆட்சியின் லட்சணம் மேலும் மோசமாவதை உணர்ந்த பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிச அரசு இதை தடுக்க வழி தேடியது.

இந்த வழக்கை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இடைக்கால தடை பெற்றதுடன் அவசர அவசரமாக தங்கள் மாநிலத்தில் விசாரணை நடத்த சி.பி.ஐக்கு வழங்கப்பட்ட பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ளது.

இதன்படி இனி சி.பி.ஐ கேரளாவில் வழக்கு பதிவு, விசாரணை செய்ய மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டியது கட்டாயமாகிறது. ஏற்கனவே சாரதா நிதி நிறுவன ஊழல் உட்பட பல புகார்களில் சிக்கியுள்ள மம்தா, மேற்கு வங்கத்தில் சி.பி.ஐ விசாரணையை தடுத்ததும். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கும் மாநிலங்களின் ஊழல்கள் வெளியே தெரியாமல் இருக்க மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா என்ன!?