வாட்ஸ்-அப் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய ‘ரிஸ்டா’ இருசக்கர மின் வாகனத்தை அறிமுகம் செய்தது ஏத்தர்

நாட்டின் முன்னணி இருசக்கர மின் வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விளங்குகிறது. இந்நிறுவனத்தின் 2-வது வாடிக்கையாளர் சந்திப்பு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏத்தர் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அரசின் சிந்தனை அமைப்பான ‘நிதி ஆயோக்’ முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த், மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் உலகின் சாம்பியனாக இந்தியா உருவெடுக்கும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ‘ரிஸ்டா’ என்ற புதிய மின் வாகனத்தை ஏத்தர் நிறுவனத்தின் இணை நிறுவனர் தருண் மேத்தா அறிமுகம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
குடும்பத்தில் உள்ள அனை வருக்கும் ஏற்ற ரிஸ்டா மின் வாகனத்தை அறிமுகம் செய் கிறோம். இதில் குடும்பத்தினர் வசதியாக அமர்ந்து செல்ல ஏதுவாக பெரிய அளவிலான இருக்கை உள்ளது. இருக்கைக்கு கீழே பொருட்கள் வைப்பதற்கு இதுவரை இல்லாத வகையில் 34 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடவசதி உள்ளது. வாகனம் ஓட்டும்போது தவறி விழுவதைத் தடுப்பதற்காக ஸ்கிட் கன்ட்ரோல், டிரைவ் கன்ட்ரோலர் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன. இந்த வாகனம் 2 வகைகளில் கிடைக்கிறது. இதன் அடிப்படை விலை ரூ.1,09,999. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏத்தர் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் ஸ்வப்னில் ஜெயின் கூறும்போது, “ஸ்டாக் 6.0 என்ற மேம்படுத்தப்பட்ட மென்பொருளையும் அறிமுகம் செய்துள்ளோம். இதன்மூலம் செல்போனை இருசக்கர வாகனத்துடன் இணைக்க முடியும். வாகனம் ஓட்டும்போது வாட்ஸ்-அப் தகவலை பார்த்து பதில் அளித்தல், இருப்பிடத்தை ஷேர் செய்தல் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. ஹேலோ என்ற பெயரில் ஸ்மார்ட் ஹெல்மெட் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் ப்ளூடூத் ஸ்பீக்கர் வசதி இருக்கும். இதை வாகனத்தின் டேஷ்போர்டு மூலம் இயக்க முடியும். இதன் மூலம் பாடல் கேட்கவும், செல்போன் அழைப்பை ஏற்று பேசவும் முடியும்” என்றார்.