மீண்டும் தலையெடுக்கும் தலையை வெட்டும் கோஷங்கள்

ஷாருக்கானின் சர்ச்சைகுரிய ‘பதான்’ திரைப்படத்தின் முதல் காட்சியிடுதலுக்கு எதிராக மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் சில ஹிந்து அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மற்றும் பத்வாலி சௌக் பகுதிகளில் முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் போராட்டங்கள் நடத்தினர். இதில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டங்களில்சர்ச்சைக்குரிய வகையில், சர் தன் சே ஜூடா (தலையை வெட்டுவோம்) அல்லா ஹு அக்பர் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் (வி.ஹெச்.பி) தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் தனது டுவிட்டரில் இந்த இரண்டு வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். மேலும், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா ஆகியோரை தனது டுவீட்டில் டேக் செய்து, “இன்று இந்தூரில் ‘சர் தன் சே ஜூடா’ கும்பல் செயல்படுவது அவர்களுக்கு (சௌஹான் மற்றும் மிஸ்ரா) தெரிந்திருக்காது. இந்த ‘ஜிஹாதி’ கூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசர தேவை உள்ளது. ஜிஹாதி கும்பலுக்கு எதிராக உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க எங்களது மாநில பிரதிநிதிகள் இன்று இரவு இந்தூரில் உள்ள உயர் காவல்துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்” என்று கூறியிருந்தார். இதேபோல வி.ஹெச்.பி அமைப்பினர் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்தனர். இதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, முகமது நபிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி போராட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தற்போது தலையை வெட்டுவோம் என்ற மத அடிப்படைவாத கோஷங்கள் ஒலித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாரதத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்களின் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும், நூபுர் ஷர்மாவை ஆதரித்ததற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அப்பாவி தையல்காரரான கன்னையா லால், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் உமேஷ் கோல்ஹே போன்ற பலரை தீவிர முஸ்லிம் அடிப்படைவாதிகள் கொடூரமாக வெட்டிக்கொன்றனர் என்பதும் நினைவு கூரத்தக்கது.