மீண்டும் ஆட்சியை பிடித்தது தேசிய ஜனநாயக கூட்டணி

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் நடைபெற்று முடிந்த பிகார் மாநில தேர்தலில் முடிவுகள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களைப் பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
ஆர்.ஜே.டி தலைமையிலான எதிர்கட்சிக் கூட்டணிக்கு 110 இடங்கள் கிடைத்துள்ளன. தேர்தலுக்கு முன்னர் தே.ஜ.கூட்டணிக்கு வந்த ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா, விகாசின் இன்சால் பார்டி தலா நான்கு இடங்களை வென்றுள்ளது. தேர்தலுக்கு முன்பாக நிதிஷ்குமாரை சாடி கூட்டணியிலிருந்து வெளியேறிய சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது. இது நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு கிடைக்கவேண்டிய 40க்கும் மேற்பட்ட தொகுதிகளை எதிர்கட்சிக்கு கிடைக்க உதவியுள்ளது. இந்த தேர்தல் சில மாறுபட்ட முடிவுகளையும் கொடுத்துள்ளது. குறிப்பாக சீமான்ஜல் பகுதியில் முஸ்லிம் அடிப்படைவாத கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 5 இடங்களை வென்றுள்ளது கவனிக்கத்தக்கது. எதிர்கட்சியின் கூட்டணி பலத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் 16 இடங்களை வென்றுள்ளது. இது இழந்த செல்வாக்கை மீட்டுள்ளதா அல்லது கூட்டணியின் உதவியா என்பதை எதிர்காலம் தெரிவிக்கும்.
கவனிக்கத்தக்க அம்சங்கள்:
• மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் ஆதரவு நிலை தொடர்கிறது.
• காங்கிரஸின் நிலை தொடர்ந்து பின்னடைவைச் சந்திக்கிறது.
• பிற மாநிலங்களின் இடைத்தேர்தலில்களிலும் பாஜக அபார வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் 19 இடங்களை வென்றதன் மூலம் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. குஜராத்தில் எட்டு இடங்களில் முழு வெற்றியையும் உ.பியில் 6 இடங்களையும் மணிப்பூரில் 4 இடங்களையும் கர்நாடகத்தில் 2 இடங்களையும் தெலுங்கானாவில் ஒரு இடத்தையும் வென்றுள்ளது.