மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 10

சிவபிரான் அடிமுடி அறிய முடியாதவன். அவனது திருவடிக் கமலங்கள், கீழ் உலகங்கள் ஏழுக்கும் கீழாய், சொல்லுக்கு அப்பாற்பட்டதாக, அளவு படாதவையாய் இருக்கின்றன.(பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்)’ மலர்களால் அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள உலகங்கள் அனைத்திற்கும் மேலானதாய் இருக்கிறது.

உமையொரு பாகனான இறைவன் ஒரேவகையானவன் அல்லன்; அவன் எல்லாமும் ஆனதால் ஒருவனேயும் அல்லன். வேதங்களும் வானவரும் மானுடரும் துதித்த போதும் வற்றாதது அவனது புகழ். இணையற்ற உயிர்த்தோழன் அவன். அடியாரோ கணக்கற்றவர். அவனது ஊர் எந்த ஊர்! எதை அவனது பெயர் என்று கூறுவது? அவனுக்கு யார் உறவினர், யார் அயலவர். ஏதவனூர்?ஏதவன் பேர்? ஆருற்றார்?ஆரயலார்? அவனை என்னவென்று சொல்லிப் பாடுவது!’ என்று சிவபெருமானின் பெருமைகளை(ஏதவனைப் பாடும்) அரனின் கோவிலைச் சார்ந்த பெண்பிள்ளைகளிடம் போற்றிக் கூறுகின்றனர் தோழியர்.