போலீசார் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடியடி நடத்துவதில் தவறில்லை – பாஜக எம் பி கெளதம் காம்பிர் அதிரடி கருத்து

மத்திய அரசு திருத்தம் செய்துக் கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எதிர்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

கடந்த ஞாயிற்று கிழமை அன்று டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் பாஜக எம் பி கெளதம் கம்பீரிடம், டெல்லியில் பல்கலைகழக மாணவர்கள் மீது போலிசார் தடியடி நடத்தியது குறித்து நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அதில் பதில் அளிக்கையில் என்னை பொறுத்தவரை மாணவர்கள் மீது போலிசார் தடியடி நடத்தியது தவறு.

ஆனால், அசம்பாவிதங்கள் நடந்து வன்முறை ஏற்பட்டால் போலீசார் தங்களைப் பாதுகாக்க தடியடி நடத்துவதில் தவறில்லை, நீங்கள் கற்களை எறிந்தால், பொது சொத்துக்களுக்கு தீ வைத்தால் அதற்கு ஏற்றார்போல் போலீசார் எதிர்வினையாற்றுவார்கள்.

நீங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால், எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. உங்கள் பிரச்சனைகளை பேசுங்கள், அந்த விஷயத்தை மத்திய அரசிடம் கொண்டு செல்லுங்கள், அதை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

குடியுரிமை சட்டம் பற்றி தவறான வதந்திகள் பரப்பபடுகின்றன. இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல, இந்த சட்டம் “குடியுரிமை வழங்குமே தவிர குடியுரிமையை பறிக்காது” என தெரிவித்தார்.