பஸ்சில் இறக்கி விடப்பட்ட மாணவி அரசு பஸ் நடத்துனர் ‘சஸ்பெண்ட்’

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு மாலை நேரத்தில், மாநில அரசு பஸ் இயக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை அந்த பஸ்சில், பந்தலுார் அருகே காபிகாடு பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவி பயணித்தார். மாலை 6:30 மணிக்கு, தான் இறங்க வேண்டிய பகுதியில் பஸ்சை நிறுத்துமாறு கூறினார். அப்போது, பஸ் நடத்துனர் பாபு என்பவர், ‘இது எக்ஸ்பிரஸ் பஸ்; கண்ட இடங்களில் பயணிகளை இறக்கி விட்டால், நாங்கள் எப்படி செல்ல முடியும்’ என, பேசி உள்ளார்.

பஸ்சில் இருந்த சில பயணியர் நடத்தினரிடம் வாக்குவாதம் செய்ததால், காபிகாடு பகுதியில் இருந்து, 1 கி.மீ.,யில் யானைகள் நடமாடும் பகுதியில் மாணவியை இறக்கிவிட்டு சென்றார். இந்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது. தொடர்ந்து, நீலகிரி போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜ் விசாரணை செய்து, நடத்துனர் பாபுவை நேற்று, ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார்.