நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவையே!

உங்கள் பையன் திருவண்ணாமலையில் சாமியாராக இருக்கிறார்” என்ற செய்தியைக் கேட்டதும் வேங்கடராமனுடைய அம்மாவின் மனம் பதறியது. தனது பிள்ளையை அழைத்து வருவது என்ற உறுதியுடன் மூத்த மகன் நாகசாமியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு வந்தார்.
சாமியார் கோலத்தில் வெறும் கோவணத்துடன் இருந்த தனது மகனின் நிலை கண்டு கதறித் துடித்தார். என்னுடன் வந்துவிடு மகனே… உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கவா பத்து மாதம் சுமந்து பெற்றேன்” என்று கண்ணீர் சிந்தினார்.
தாயின் கண்ணீரும் கதறலும் வேங்கடராமனின் உள்ளத்தில் எந்தத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை. மௌனமாக அமர்ந்திருந்தார். அருகில் இருந்தவர்கள் ஏதேனும் கூறுங்கள், அல்லது எழுதியாவது காட்டுங்கள் என்று கூறினார்கள். வேங்கடராமன் எழுதிக் காட்டினார்.
அவரவரது பிராப்த பிரகாரம், அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான். என்றும் நடவாதது என்ன முயற்சித்தாலும் நடக்காது. நடக்க இருப்பதை என்ன தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாய் இருப்பதே நன்று” என்று எழுதிக் காட்டினார். அதாவது நடப்பது நடந்தே தீரும். நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவையே என்பதுதான் அது.
மகனின் வைராக்கியத்தை உணர்ந்த அவரின் அம்மா துயரத்துடன்
ஊர் திரும்பினார். வேங்கடராமன் தான், பிற்காலத்தில் பகவான்
ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பெற்றார். இந்த சம்பவம் நடந்தபோது அவருக்கு வயது 17 தான்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்