நாட்டின் இள வயது நீதிபதி

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர், மாயாங்க் பிரதாப் சிங், 21. ராஜஸ்தான் பல்கலையில், ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்பை முடித்த இவர், ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வில் வெற்றி பெற்றார். இதையடுத்து, விரைவில் அவர் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். நாட்டின் மிக இளம் வயது நீதிபதி என்ற பெருமை, அவருக்கு கிடைக்கவுள்ளது. இது குறித்து, மாயாங்க் பிரதாப் சிங் கூறியதாவது:தினமும், 13 மணி நேரம் தொடர்ந்து படிப்பேன். என் பெற்றோரும், எனக்கு உதவினர். நீதிபதியாக பணியாற்றுவோருக்கு நேர்மை தான் மிகவும் முக்கியம். வெளியில் இருந்து வரும் எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல், ஆள் பலம் மற்றும் பண பலத்துக்கு ஆசைப்படாமல், நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு, அவர் கூறினார்.