நமுத்துப்போன மயக்க பிஸ்கட்

தமிழக மக்களுக்கு, ஹிந்து மதம், தேசநலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘தெய்வீக தமிழக சங்கம்’ அமைப்பு ‘தேசம் காக்க தெய்வீகம் காக்க’ என்ற சிறு புத்தகத்தை அச்சிட்டு வினியோகித்தது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திராவிடக் கழகம் ‘மயக்க பிஸ்கட்’ எனும் ஒரு புத்தகத்தை வினியோகிக்க ஆரம்பித்துள்ளது. இதில் ‘கோயிலுக்கு செல்லாதீர்கள், குங்குமம் திறுநீறு அணிய வேண்டாம்’ என்பது போன்ற ஹிந்து விரோத கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இது பொது மக்களிடையே வெறுப்பை தூண்டியுள்ளது. சமீபத்தில் பூந்தமல்லியில் இந்த புத்தகத்தை கொடுக்க சென்றவர்களை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்க துவங்கினர். புத்தகம் கொடுத்தவர்களை போலீசார் வந்து மீட்டுச் சென்றனர். தி.கவின் இந்த முயற்சியால் தங்கள் ஓட்டு வங்கிக்கு ஆபத்து என உணர்ந்த தி.மு.க, இதனை ஆதரிக்கவில்லை. இதை போன்ற எதிர்ப்புகளை அடுத்து வீரமணி, தனது கழகத்தவர் யாரும் தனியாக செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.