திருப்பாவை – 15

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான்  ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு டையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார்  போந்தெண்  ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயானைப் பாடேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
உறக்கம் விட்டெழுந்த கோபிகை ஒருத்தியுடன் ஆண்டாள் உரையாடுவதைப்போல அமைந்துள்ள பாசுரமிது. பாவை நோன்புச் சடங்கின் ஒருபகுதியாகத் கூட இருக்கும் கோபியரைத் துயிலெழுப்பும் பாசுரங்களில் இது கடைசிப் பாசுரம்.
இளமையான கிளியைப் போன்ற அழகிய பேச்சை உடைய பெண்ணே. நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் தூங்குபவளை  அழைத்தனர். அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள். விடுவார்களா தோழிகள். உன்னுடைய வார்த்தைகள் என்னவோ  நன்றாகத்தான் உள்ளனன. இவ்வளவு நேரம் நீ தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபமுறாதே என அறிவுறுத்துகிறாய் ! என்று சிடுசிடுத்தனர். அப்போது அவள்,” எனக்குத்தான் பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாகவே இருந்து விட்டுப் போகிறேன்,” என்கிறாள்.
தோழிகள் உடனே, அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத தனிச் சிறப்பு உனக்கு இருக்கிறது?,” என்று கடிந்து கொள்கிறார்கள்.  அவளும் பேச்சை விட மறுத்து ,”. என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா?” என்கிறாள். தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். அனைவரும் வந்து விட்டனர்.” என்றும் .  கம்சனின் மாளிகையின் வாசலில் தன்னை மிதித்தழிக்கக் காத்திருந்த குவலயாபீடம் எனும் யானையைக் கொன்று, கம்சன், சாணூரன், முஷ்டிகன் ஆகிய பகைவர்களின் அகந்தையை அழித்தவனும், மாயச்செயல்கள் புரிந்து நம்மை ஆட்கொள்ளுபவனும் ஆன கண்ணனின் புகழைப் பாட விரைவில் எழுந்து வருவாய்”, என்கின்றனர்.