திருப்பாவை – 16

நாயகனை  நின்ற நந்தகோபனுடைய ,

கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண ,

வாயில் காப்பானே  மணிக்கதவம் தாள் திறவாய் ,

ஆயர் சிறுமியரோமுக்கு  அறைபறை ,

மாயன்  மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் ,

வாயால் முன்னமுன்னம்  மாற்றாதே அம்மா நீ ,

நேய நிலைக்கதவம் நீக்கே லோரெம்பாவாய்

விளக்கம்:
மார்கழி நோன்பின் ஒரு பகுதியாக நீராடச்செல்லும் தோழியர் பலரும் குழுக்களாகச்
செல்லும் வழியில் கண்ணன் புகழ் பாடும் பாடல்களைக் கேட்ட பின்னும் துயில் எழ மனமில்லாமல்
சோம்பேறித்தனத்துடன் தூங்க விழையு ம் ஒரு சில தோழிகளை யும் எழுப்பிக்கொண்டு
செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் தோழிகள் அனைவரும் நீராடிவிட்டு மாயவன் கண்ணனின்
மணிமாளிகையை நெருங்கிவிட்டனர். மாளிகையின் முக்கியக்கதவு சார்த்தப்பட்டிருக்கிறது.
வாசலில் மாளிகையைக் காவல் காக்கும் பாதுகாவலன் அமர்ந்திருக்கிறான்.
எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை காக்கும்
காவலனே!கொடிகள் மற்றும் தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டு அழகுக்கு அழகு சேர்க்கும்
மாளிகை வாசலின் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மணி க்கதவு என்னும்
மாளிகைக் கதவைத் திறப்பாயாக!!. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன்
எங்களுக்கு ஒலியெழுப்பும் சிறு முரசு தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப்
பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். ஊழி முதல்வனைத் துயிலெழுப்பும்
பாடல்களையும் பாட உள்ளோம். அதெல்லாம் அனுமதிக்க முடியாது என உன் வாயால் சொல்லி
எங்கள் நம்பிக்கையை வீணடித்து விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை தோழிகளாகிய எங்கள்
பொருட்டு திறப்பாயாக. என்கிறார்கள். நம் வாயிலிருந்து வரும் சொற்கள், நாம் செய்யும்
செயல்கள் அனைத்தும் நல்லவை ஏற்படுத்துபவையாகவே அமைய வேண்டும் என்ற கருத்தை
இப்பாசுரத்தின் மூலம் அறிகிறோம்.