தன் உயிரை கொடுத்து பெண்ணை காப்பற்றிய இளைஞர்

திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு என்கிற பகுதியில் மாலை சுமார் 6 மணி அளவில், மாரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயது பெண் நரசிங்கபுரம் செல்வதற்கு சாலையில் காத்திருந்தார். அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ ஒன்றில் அவர் ஏறினார். அவருடன் சில பயணிகளும் ஏறிக்கொண்டனர். மற்ற பயணிகள் வழியில் இறங்கிவிட்ட நிலையில், அந்தப் பெண் மட்டும் வாகனத்தில் இருந்தார். அந்த  வாகனம் நரசிங்கபுரம் செல்லாமல் கொண்டஞ்சேரி என்கிற பகுதியிலிருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் வேகமாக விரைந்தது. ஏதோ தவறு நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட அந்தப் பெண், வாகனத்தை நிறுத்துமாறு ஓட்டுநரை வலியுறுத்தினார். அதை அவர் பொருட்படுத்தாமல் விரைந்தபோது, அசம்பாவிதம் நடக்க இருப்பதை உணர்ந்து கொண்ட அந்தப் பெண், தன்னைக் காப்பாற்றும்படி கூச்சலிடத் தொடங்கினார்.

கொண்டஞ்சேரியில் 22 வயது யாகேஷ் என்பவரும், அவரது நண்பர்கள் எஸ்தர் பிரேம்குமார், வினீத், துரைராஜ், சார்லி பிராங்க்ளின் ஆகியோரும் சாலையோரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஷேர் ஆட்டோவிலிருந்து உதவி கேட்டு அந்தப் பெண் எழுப்பிய அலறலால் திடுக்கிட்ட அந்த இளைஞர்கள், உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவ தங்களது இரு சக்கர வாகனங்களில் அந்த ஷேர் ஆட்டோவை துரத்தத் தொடங்கினர்.
தனது வாகனத்தை சில இளைஞர்கள் துரத்திக் கொண்டு வருவதைப் பார்த்து பயந்த ஆட்டோ ஓட்டுநர், மேலும் வேகமாக விரைய முற்பட்டார். ஓர் இடத்தில் எதிரில் வந்த வாகனத்திற்காக சற்று மெதுவாகச் சென்றபோது அந்தப் பெண் வாகனத்திலிருந்து சாலையில் குதித்துவிட்டார். அந்த ஷேர் ஆட்டோ நிற்காமல் விரைந்தது. இதற்குள் மூன்று கி.மீ. தூரம் அந்த ஷேர் ஆட்டோ பயணித்திருந்தது.

தனது ஏனைய நண்பர்களை அந்தப் பெண்ணை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பணித்துவிட்டு, யாகேஷும், சார்லி பிராங்க்ளினும் அந்த ஷேர் ஆட்டோவை துரத்திச் சென்றனர். அந்த ஷேர் ஆட்டோவைக் கடந்து சென்று வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். பிடிபடுவோம் என்று தெரிந்ததும் அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர், யாகேஷ் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதித் தள்ளிவிட்டு விரைந்துவிட்டார்.
அதனால் படுகாயமடைந்த யாகேஷ் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட யாகேஷ், சனிக்கிழமை இரவு உயிர் நீத்தார். பிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த கேசவன் என்கிற ஷேர் ஆட்டோ ஓட்டுநரை மப்பேடு போலீஸார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். கடத்தப்பட்ட பெண், பெரிய அளவில் காயமில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதான் நடந்த சம்பவம்.