தமிழகத்தில் முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பிரதிநிதி சபா

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபா முதல் முறையாக தமிழகத்தில் கோவை எட்டிமடையில் உள்ள அமிர்தா கல்லூரியில் மார்ச் 19, 20, 21 தேதிகளில் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பாரத நாடு முழுவதிலுமிருந்து 1400 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற வன்முறை பற்றி ஆழ்ந்த கவலை தெரிவித்து, அது பற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

வங்கதேசத்தின் எல்லைக்கருகில் மால்டா மாவட்டம் காலியாசக்  என்னுமிடத்தில் உள்ள காவல் நிலையத்தின் மீது ஜிகாதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி கொள்ளையடித்ததுடன் தீ வைத்து கொளுத்தியதில் அங்கிருந்த குற்றச்செயல்கள் பற்றிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன.  இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நமது பாதுகாப்பு படையினர் மீதும் நடத்தப்பட்டு வருகிறது.  இவை தேசிய பாதுகாப்பிற்கும் சட்ட ஒழுங்கிற்கும் மிகப்பெரும் சவாலாக இருந்துவருகிறது. இஸ்லாமிய பயங்கரவாத மௌல்விகள் அவ்வப்பொழுது வன்முறையைத் தூண்டும் விதமாக பத்வா கட்டளைகளை அறிவித்து வருகின்றனர். இதன் காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பல இடங்களில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது.  கத்வா, காளிகிராம், ஈலம்பஜார் மற்றும் மெய்தியாபுருஜ் (கொல்கத்தா) ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறை தாக்குதல்கள் இந்த வகை. ஜிகாதி அடிப்படைவாதிகள் கொடுக்கும் அழுத்தத்தினால் எல்லையை ஒட்டி வசித்து வருகின்ற கிராமங்களில் இருந்து ஹிந்துக்கள் வெளியேறி வருகின்றனர்.

கள்ளநோட்டு கடத்தல், பசு இனங்கள் கடத்தல்,  சட்டவிரோத ஊடுருவல்கள் இவற்றை        ஜிகாதியினர் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.  பர்துவான் குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி விசாரணை செய்த தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) எல்லையின் இருபுறங்களிலும் ஏராளமான ஜிகாதி அடிப்படைவாத குழுக்கள் ஒரு சங்கிலித் தொடர்போல் கட்டமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருவதை கண்டறிந்துள்ளது.

ஜிகாதி தீவிரவாதிகள் திட்டமிட்ட ரீதியில் கலவரத்தை தூண்டிவிடுகின்றனர்.  அவர்களுக்கு மந்திரிசபையில் இடமும்  சில முக்கியமான அரசியல், அரசு பதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.  அதே நேரத்தில் மாநில அரசானது ஹிந்துக்கள் தங்களது மத சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.   சில மாதங்களுக்கு முன்பு முஹரம் பண்டிகையை காரணமாகச் சொல்லி துர்கா தேவி சிலையை கரைக்கின்ற நிகழ்ச்சியை தடைசெய்தது. மேற்கு வங்க அரசின் இம்முடிவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

பல குண்டுவெடிப்பு சம்பவங்கள், கலவரம், வன்முறை, பெண்களை மானபங்கப்படுத்துவது போன்ற செயல்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.  இந்த கொடுமைகளின் காரணமாக ஹிந்து சமுதாயம் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்தான் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஜுரான்பூர், வைஷ்ணவ நகர், கரக்பூர், மல்லர்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற துர்கா பூஜை விழாவின் போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பதினேழு வயது மாணவி மீது திராவகம் வீசப்பட்டதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.  தௌலாகத் என்னுமிடத்தில் 2016 டிசம்பர் மாதம் 13,14 ஆகிய இரண்டு நாட்கள் ஹிந்துக்கள் மீது திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் ஹிந்துக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது, கொள்ளையடிக்கப்பட்டது. ஹிந்து பெண்களை மானபங்கப்படுத்தியது போன்ற கொடூரமான சம்பவங்கள் நடந்துள்ளன.  இந்த வன்முறை வெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டிய மாநில அரசு, உண்மைகளை முழுமையாக மூடிமறைத்ததுடன் அங்கு நடைபெற்ற கொடூரமான செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நடுநிலையான பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்குகள் போட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில அரசானது தேச பக்தியை புகட்டிவருகின்ற பள்ளிகளை தடைசெய்யப் போவதாக மிரட்டி வருகிறது.  ஆனால், அடிப்படைவாத வெறுப்புணர்வுக் கருத்துக்களை புகட்டி வருகின்ற சிமூலியா மதரஸா போன்ற ஆயிரக்கணக்கான மதரஸாக்களை கண்ணை மூடிக்கொண்டு மாநில அரசு ஆதரித்து வருகிறது. ஜிகாதி அடிப்படைவாதிகளின் வற்புறுத்தலால் பாடப்புத்தகங்களில் உள்ள உண்மையான வங்க மொழி வார்த்தைகள் சிதைக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக மேற்கு வங்க பள்ளிகளில் நடைபெற்று வந்த சரஸ்வதி பூஜை விழாக்கள் நடத்துவதற்கு எண்ணற்ற இடையூறுகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.  அதேநேரத்தில் அரசுப் பள்ளிகள் இஸ்லாமிய மயமாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.  கடந்த வருடம் பள்ளிகளில் மிலாடி நபி விழா கொண்டாட வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டதே இதற்கு சாட்சி.  கொல்கத்தாவில் இருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெஹட்டா என்னுமிடத்தில் செயல்பட்டு வருகிற பள்ளி நிர்வாகம் மிலாடி நபி விழாவை கடைபிடிக்க மறுத்த காரணத்தினால் அங்கு படித்துவந்த 1,750 மாணவ மாணவிகளை ஜிகாதி தீவிரவாதிகள் சிறைபிடித்ததுடன் பள்ளியின் உள்ளே சென்று தங்களுடைய கொடியை ஏற்றி ஆசிரியைகளை வகுப்பறையில் வைத்து பூட்டினர்.  இதன் விளைவாக அப்பள்ளி ஒரு மாதத்திற்கு மேல் மூடப்பட்டிருந்தது.

தேசப் பிரிவினையின் போது (1947) ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த பகுதிகள் மேற்கு வங்கத்திற்குள் வந்தன.  அதன்பிறகு, கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) ஹிந்துக்கள் மீது தொடர்ந்து படுகொலைகள், வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.  இதனால், அங்கிருந்து உயிர் தப்பி வந்த ஹிந்துக்கள் மேற்கு வங்கத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.  கிழக்கு பாகிஸ்தானில் (பங்களாதேஷ்) இருந்து மேற்கு வங்கத்திற்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் ஹிந்துக்கள் வந்து குடியேறிய பிறகும் கூட அம்மாநிலத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை சரிந்து வருவது மிக ஆச்சரியமாக உள்ளது.  1951-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி மேற்கு வங்கத்தில் 78.45%-ஆக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டில் 70.54%-ஆக குறைந்துள்ளது.  இது நமது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் மிகப் பெரிய ஆபத்து.

தீவிரவாதிகளின் வன்செயல்களையும் இஸ்லாமியர்களை தாஜா செய்கின்ற கொள்கையையும் கடைபிடித்து வருகிற மேற்கு வங்க அரசினை ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பிரதிநிதி சபா  கடுமையாகக் கண்டனம் செய்கிறது. மேற்கு வங்க அரசு கடைபிடித்து வருகிற ஒருதலைப்பட்சமான மதச்சார்பு கொள்கைகளையும், ஜிகாதி பயங்கரவாதிகள் நடத்திவருகின்ற வன்செயல்களையும் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  மேற்கு வங்கத்தில் நிலவி வருகிற மிக மோசமான சூழ்நிலைகளைப் பற்றிய உண்மையான செய்திகளை ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு துணிச்சலுடன் எடுத்துரைக்க முன்வரவேண்டும் என இப்பிரதிநிதி சபா கேட்டுக்கொள்கிறது.  மேற்கு வங்க மாநில அரசு கீழ்த்தரமான வாங்கு வங்கி அரசியலை விட்டுவிட்டு அரசியல் சாஸனம் வலியுறுத்துகிற கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என பிரதிநிதி சபா கேட்டுக்கொள்கிறது.  தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநிலத்தின் தேசவிரோத ஜிகாதியினர் மீது உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை பிரதிநிதி சபா கேட்டுகொள்கிறது.”

ராமர் கோயில்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுகிற விஷயத்தில் இரு தரப்பாரும் பேசி முடிவு செய்யவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். எப்போதும் வலியுறுத்திவரும் விஷயம் என்று பிரதிநிதி சபா கூடுதல் நிறைவையொட்டி கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத இணை பொது செயலர் தத்தாத்ரேய கூறினார். இதற்காக ராம ஜென்ம பூமி யக்ஞ சமிதி, ஆன்றோர்கள், அறவோர் பேரவை ஆகியவை முயன்று வருவதை அவர் சுட்டிக் காட்டினார். அறவோர் பேரவையின் முடிவை ஆர்.எஸ்.எஸ் ஆதரிக்கும்  என்றார் அவர். நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்க்கப்படுமானால் அது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

 

மாதா அமிர்தானந்தமயி

நீங்கள் வெற்றிபெற அம்மா பிரார்த்திக்கிறேன்”

ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பிரதிநிதி சபா கூடுதலுக்கு வந்திருந்த பிரதிநிதிகள் அனைவருக்கும் ஆசி வழங்கி மாதா அமிர்தானந்தமயி நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து:

* நித்தியமான சத்தியத்தை உலகில் எந்தவொரு சக்தியாலும் அழிக்க முடியாது. ஆனால் நாம் அசட்டையாக இருக்கலாம் என்று நினைத்துவிடக்கூடாது. மிகவும் விழிப்புடன் பணிபுரிந்து வரவேண்டும். கிரிக்கெட் ஆடுகிறவர்கள் எல்லாவற்றையுமே மறந்து மேட்ச் ஜெயிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதைப் போல.

* மற்ற மதத்தாரின் பிரார்த்தனை கூடங்களில் அவரவர்களுடைய புனித நூல்கள் பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அதற்காக பள்ளிகள், கல்லூரிகள் எல்லாம் நடத்துகிறார்கள். அங்கே பயிற்சி கொடுத்து நிறைய பேரை மதப்பிரச்சாரத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால் ஹிந்து சமுதாயத்தில் அப்படியொரு ஏற்பாடு கிடையாது. பல கோயில்களில் நிறைய நிதி சேர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதில் ஒரு சிறு பகுதிகூட ஹிந்து மத பிரச்சாரத்திற்காக செலவு செய்யப்படுவதில்லை. இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேன்டும்.

*  நீங்கள் அனைவரும் ஊக்கத்துடன் செயல்படும் கார்யகர்த்தர்கள் ஆகவேண்டும். ஒன்றுபட்டு விரைந்து முன்னேற வேண்டும். அப்போதுதான் பாரதம் மீண்டும் மகோன்னத நிலையை அடையும். அம்மா பரம்பொருளிடம் வேண்டுவதெல்லாம், காலத்தின் சவால்களை கருத்தில் கொண்டு பகவானின் பிள்ளைகள் முன்னேறி முன்னணி வகித்து வெற்றிபெற சக்தி தாருங்கள் என்றுதான்.

 

வளரும் சங்க சக்தி

பிரதிநிதிசபையில் பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி அளித்த அறிக்கையின்படி ஆர்.எஸ்.எஸ்ஸின் அமைப்பு வளர்ச்சி: நாடு முழுவதும் 36,693 ஊர்களில் 57,233 ஷாகாக்கள் நடைபெறுகின்றன. ஷாகா, வாராந்தர மிலன், சங்க மண்டலி எல்லாம் சேர்த்து மொத்தம் 59,136 ஊர்களில் சங்கப்பணி நடைபெறுகிறது.

சங்க பயிற்சி முகாம்கள்

7 நாட்கள் பயிற்சி முகாம்            1,059

முகாம்களில் பயிற்சி பெற்றவர்கள்              1,04,256

21 நாட்கள் பயிற்சி முகாம்                93

முகாம்களில் பயிற்சி பெற்றவர்கள்              22,603

 

சோ, ஜெயலலிதா மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ் இரங்கல்

காலஞ்சென்ற மூத்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் கே. சூர்யநாராயண ராவ், துக்ளக் சோ. ராமசாமி, ஜெ. ஜெயலலிதா, கர்நாடக இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா உள்ளிட்டோர் மறைவுக்கு கோவையில் கூடிய ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பிரதிநிதி சபா இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.