சொல்ல சொல்ல இனிக்குதடா!

சி.என். அண்ணாதுரை சொற்பொழிவுகளில்  அடிக்கடி தென்படும் வார்த்தைகள் ‘தடாகம்’, ‘தாரகை’, பரிமளம், ‘பரிமாணம்’,

 கருணாநிதி ஒருமுறை தன் கட்டுரையில் ‘மரம்’ என்ற பதத்திற்கு ‘தரு’ என்ற சொல் பயன்படுத்துமாறு உதவியாளரிடம் சொன்னாராம்.

 1967-70 காலங்களில் ஒரு பள்ளிச் சிறுமி சென்னை காந்தி மண்டபத்திற்கு சுற்றுலா போயிருந்தாள். மதிய நேரம். பூங்காவில் தோட்டக்காரர் செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். சிறுமி அவரிடம் சென்று ‘‘தாத்தா, தண்ணீர் குடிக்கலாமா?” என்று கேட்டாள். அவர் குழாயை சிறுமியின் பக்கம் திரும்பி ‘‘புஷ்கலமாக’’ என்றார். அந்த வார்த்தைக்கு ‘‘தாராளமாக’’ என்று பொருள்.

 1980 களின் துவக்கத்தில் சேலம் அண்ணா போக்குவரத்து பேருந்துகளில் ஒரு அறிவிப்பு; ‘‘அனுமதிச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்’’, அந்த அலுவலகத்தில் ஒரு அலுவலர் ‘‘அபராதம்’’ வேண்டாம். ‘‘தண்டம்’’ என்ற தூய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்” என்றாராம்.மீண்டும் திமுக – கருணாநிதி.

நடக்க இருக்கும் மாநில மாநாட்டிற்கு முன்னோடியாக மண்டல வாரியாக சிறுசிறு மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை தயாராகிக் கொண்டிருக்கையில், தொண்டருக்கு ஒரு ஐயம்; மண்டலம் தமிழ்ச் சொல்லா? என்று தயங்கியபடி தலைவர் கருணாநிதியிடம் கேட்டாராம். அதற்கு முத்தமிழ் வித்தகர் ‘மண்டலம்’ தமிழ்ச் சொல்தான் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தாராம்.

 கருணாநிதியும் சரி ஸ்டாலினும் சரி, அடிக்கடி சொல்லும் ‘கிஞ்சிற்றும்’ என்பது ‘கிஞ்சித்’ என்ற அகில பாரதச் சொல்லின் தமிழ் வடிவம்தானே?