சென்னையில் மழை வெள்ளத்தால் சிக்கித் தவித்த 3,500 பேரை பத்திரமாக மீட்ட முப்படை வீரர்கள்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து 3,500 பேரை பத்திரமாக மீட்டனர். அவர்களை சமூகவலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றன.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த வாரம் திங்கள்கிழமை அதிகனமழை பெய்தது.

இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. குறிப்பாக, முகலிவாக்கம், மணப்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால், அங்கு வசித்து வந்த மக்கள் கடும் அவதிக்கு ஆளாயினர். யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அத்துடன், குடிநீர் மற்றும் உணவு இன்றி தவித்தனர். இதையடுத்து, சென்னையில் உள்ள தக்ஷிண பாரத ராணுவ மையத்தைச் சேர்ந்த 12-வது மெட்ராஸ் படைப் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சம்பவ இடத்துக்கு படகுகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் விரைந்துசென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, வீடுகளில் நிர்கதியாய் சிக்கித் தவித்த வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துகள், குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

உயிரைப் பணயம் வைத்து.. வெள்ளத்தால் செல்ல முடியாத பல இடங்களில் உயிரைப் பணயம் வைத்து சிக்கித் தவித்தவர்களை படகுகள் மூலம் ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர். சகதிகள் நிறைந்த பகுதி, விஷப் பூச்சிகளின் தொல்லை ஆகிய சிரமங்களை எல்லாம் கடந்து அவர்கள் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல், மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணிகள், உடல் நலம் குன்றிய குழந்தைகள் உள்ளிட்டோரையும் பத்திரமாக மீட்டனர். கடந்த 6-ம் தேதி திருமணம் வைத்திருந்த ஒரு திருமண வீட்டாரையும் அவர்கள் மீட்டனர். 3 நாட்களில் மட்டும் 3,500 பேரை பத்திரமாக மீட்டனர்.இதேபோல், மீட்பு பணியில் கடற்படை மற்றும் விமானப் படை வீரர்களும் ஈடுபட்டனர். விமானப் படையின் 2 ஹெலிகாப்டர் மூலம் தென் சென்னையில் மேடவாக்கம் முதல் புழுதிவாக்கம் வரையிலும், வடசென்னையில் மணலி முதல் நாப்பாளையம் வரை உள்ள 16 இடங்களில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு அவர்களின் வீட்டு மொட்டை மாடி வழியாக உணவுப் பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவற்றை விநியோகித்தனர்.

மேலும், சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முப்படை வீரர்கள் ஈடுபட்டனர். இந்தியக் கடலோர காவல்படையின் 8 கப்பல்கள் மற்றும் 2 விமானங்கள் மூலம் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 3 ஆயிரம் மீன்பிடி படகுகளையும், வணிகக் கப்பல்களைம் பத்திரமாக கரை திரும்ப உதவின. இதன் மூலம், சென்னையை ஒட்டி கடல் பகுதியில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படாத வகையில் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 3,500 பேரை முப்படை வீரர்கள் பத்திரமாக மீட்டதற்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.