சுபகிருது வருடத்தை வரவேற்போம்

அறுபது தமிழ் வருடங்களில் 2022ம் ஆண்டில் சுபகிருது தமிழ் புத்தாண்டு இன்று சித்திரை ஒன்றாம் நாள் (14.4.2021) பிறக்கிறது. அறுபது ஆண்டுகளில் 36வது ஆண்டாகும் இது. சுபகிருது என்றால் அதிக நன்மைகள் நிறைந்த ஆண்டு என்று பொருள்.

தமிழ் வருடப்பிறப்பை தமிழர்கள் மட்டுமல்ல கேரள மக்கள் விஷுக்கனி காணுதல் என்றும், வங்காளத்தில் நாபா பர்ஷா என்றும், அசாமில் ரொங்காலில் பிஷு என்றும், சீக்கியர்கள் முதலான வட இந்தியர்கள் பைசாகி என்றும் கொண்டாடுகின்றனர்.

கேரளாவில் மற்றும் தமிழகத்தின் சிலபகுதிகளில் பங்குனி இறுதிநாளன்று பூஜையறையில் மனையில் ஒரு கண்ணாடியை வைத்து அதன்முன் நிறைநாழி நெல், அதன்மீது தென்னம்பாளை வைப்பர். பஞ்சபூதங்களை உணர்த்தும் விதமாய் பஞ்சலோகத்தால் ஆன உருளியில் வாழை, பலா, மா உள்ளிட்ட பழவகைகள், கொன்னைப்பூ உள்ளிட்ட பூக்கள், இனிப்புகள், தங்க நகைகள், பணம் வைத்து உறங்கிவிடுவர். வீட்டின் மூத்த பெண்கள் தூங்கி எழுந்ததும் முதலில் இவற்றைப் பார்த்துவிட்டு குளித்து பூஜையறையில் விளக்கேற்றுவர். பின் ஒவ்வொருவராக எழுப்பி, அவர் கண்களை கைகளால் மூடி பூஜையறையிலுள்ள கண்ணாடியில் இப்பொருட்களைக் காண வைப்பர். இதையே விஷுக்கனி காணுதல் என அழைப்பர்.

கேரள செல்வந்தர்கள் தங்கள் வயலில் விளைந்த பொருட்களை மாலையில்  வயலுக்கு சொந்தமானவர் வீட்டில் கொண்டு வந்து சேமிப்பர். செல்வந்தரும் அவர்தம் குடும்பத்தாரும் காலையில் இவ்விளைபொருட்களைப் பார்த்து மகிழ்வர். பாடுபட்டு உழைத்த பணியாளர்களுக்கு மனமுவந்து பணமும், பொருளுமாய் அள்ளித் தருவர். இதுவே பின்னாளில் விஷுக்கனியாகவும், கைநீட்டமுமாய் மாறியது எனவும் சொல்வதுண்டு.

காலையில் விளைபொருட்களை காணுதல் ”கனி காணுதல்” எனவும், பணியாட்கள் பரிசுப்பொட்களைக்கை நீட்டி வாங்குவதால் “கை நீட்டம்” எனவும் அழைக்கப்பட்டது.

சுபகிருது ஆண்டு தொடக்க கிரக நிலை :மேஷத்தில் சூரியன், ராகு, புதன், கன்னியில் சந்திரன், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சனி, கும்பத்தில் செவ்வாய், சுக்கிரன், மீனத்தில் குரு என அமைந்திருக்கத் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இத்தகைய  கிரகங்களின் நிலைகளைக் கொண்டு ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர்கள் கணிக்கிறார்கள்.

சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு உலகளாவிய தமிழரனைவருக்கும்  சுபங்களனைத்தும் தரவல்ல ஆண்டாக அமையட்டும்.

ஆர்.கிருஷ்ணமூர்த்தி