பைடனுடன் உரையாடிய மோடி

பாரதம் அமெரிக்கா இடையிலான ராணுவ ஆலோசனைக் கூட்டம் அமெரிக்காவில் வெற்றிகரமாக நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாரத வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் காணொலிகாட்சி வாயிலாக உரையாடினர். அதில் பேசிய மோடி, “உக்ரைனின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைச் சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. இதனை பாரதம் கண்டித்தது. அதன் விசாரணையைச் சுதந்திரமாக மேற்கொள்ள வலியுறுத்தியது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடனும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேசினேன். அமைதிக்கு வேண்டுகோள் விடுத்தேன். புதினும் ஜெலன்ஸ்கியும் நேரடிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள பரிந்துரைத்தேன். அவர்களின் பேச்சுவார்த்தை அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்” என கூறினார். பைடன், “உக்ரைனின் போர் விளைவுகளை எவ்வாறு சீர்செய்வது என்பது குறித்தான ஆலோசனையை பாரதத்துடன் இணைந்து அமெரிக்கா மேற்கொள்ளும். உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிவரும் பாரதத்தின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை” என கூறினார்.