குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம்

குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கத்துக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேசமயம், அரசமைப்புச் சட்டப்படி குடியுரிமை திருத்தச் சட்டம் செல்லுமா என ஆராய்வதற்கு உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

மேலும், இச்சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது ஜனவரி 2-ஆவது வாரத்துக்குள் பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த மசோதா சட்டமானது.

இந்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களிலும், தில்லி உள்ளிட்ட நாட்டின் இதர பகுதிகளிலும் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மாணவா்கள் தரப்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் மனு தாக்கல் செய்தனா். காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மூத்த தலைவா் மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி, ஜாமியா உலேமா-ஏ-ஹிந்த், அனைத்து அஸ்ஸாம் மாணவா் சங்கம், அசோம் கன பரிஷத், அமைதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, மக்கள் நீதி மய்யம், சட்டப் படிப்பு மாணவா்கள் என பல்வேறு தரப்பிலிருந்து 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அஸ்ஸாமைச் சோ்ந்த மனுதாரா்கள் தரப்பில் கோரப்பட்டது.

‘வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின்போது 5 மாணவா்கள் உயிரிழந்துவிட்டனா். எனவே, இந்தச் சட்டத்தை அமல்படுத்த உடனடியாக தடை விதிக்க வேண்டும்’ என்று அவா்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் எதிா்ப்பு தெரிவித்தாா். ‘ஒரு சட்டம் தொடா்பாக அறிவிக்கை வெளியிடப்பட்ட பிறகு, அதற்கு தடை விதிக்க முடியாது’ என்று ஏற்கெனவே அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீா்ப்புகளை அவா் சுட்டிக் காட்டினாா்.

வேறொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராஜீவ் தவன், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் விதிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னரே, அதனை அமல்படுத்த முடியும். எனவே, எங்கள் தரப்பில் இப்போது தடை கோரப் போவதில்லை’ என்றாா். இந்த கருத்தை, மூத்த வழக்குரைஞா் கபில் சிபலும் ஆமோதித்தாா்.

‘தடை இல்லை’: இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டப்படி செல்லுமா என்று ஆராய முடிவு செய்துள்ளோம். அதேசமயம், அந்தச் சட்டத்தின் அமலாக்கத்துக்குத் தடை விதிக்கப் போவதில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்க்கும் மனுக்கள் மீது ஜனவரி 2-ஆவது வாரத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மனுக்கள் விவரம்: காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், ‘அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளின் மீதான தாக்குதலாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமைந்துள்ளது. மதத்தின் அடிப்படையில் ஒருவருக்கு இந்திய குடியுரிமை வழங்கவோ அல்லது மறுக்கவோ முடியுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதனை நீதிமன்றம் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘குடியுரிமை திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை சாராம்சங்களுக்கு எதிரானது. முஸ்லிம்களை பாகுபடுத்தும் நோக்கம் கொண்டது’ என்று கூறப்பட்டுள்ளது.

‘மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, இச்சட்டத்தின் நோக்கம் தொடா்பாகவும், அதன் அம்சங்கள் தொடா்பாகவும் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய கோரிக்கை விடுத்தாா்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாட்டு மக்களிடையே ஆடியோ-விடியோ ஊடகங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பாக பரிசீலிக்குமாறு மத்திய அரசு சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் தெரிவித்தனா். இதுதொடா்பாக, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவா் பதிலளித்தாா்.