குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, தி.மு.க., – காங்., கட்சிகள், முஸ்லிம்களை தூண்டிவிடுகின்றன

”குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, தி.மு.க., – காங்., கட்சி கள், முஸ்லிம்களை துாண்டி விட்டு, பலிகடாவாக்கி வருகின்றன,” என, தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாத் மாநில தலைவர் இப்ராஹிம் கூறினார்.

சேலத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தியா முழுவதும் போராட்டம் நடப்பதற்கு, சில அரசியல் கட்சிகளின் துாண்டுதலே காரணம். இந்த சட்டத்தை, முஸ்லிம்களுக்கு எதிரானதாக சித்தரித்து, தி.மு.க., – காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தை துாண்டி, அவர்களை பலிகடாவாக்குகின்றன.

இந்த சட்டத்தால் ஆபத்து எனக் கூறி, ஸ்டாலினும், திருமாவளவனும் பொய் பிரசாரம் மேற்கொண்டு, முஸ்லிம்கள் மத்தியில், அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை வைத்தே, எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. இந்த சட்டத்தில் உள்ள, ஒரே ஒரு ஆபத்தை நிரூபித்து விட்டாலும், நான் உங்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளேன். குடியுரிமைத் திருத்தச் சட்டம், முஸ்லிம்களை பாதுகாக்கவே கொண்டு வரப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.