காலம் கடந்தாவது கண் திறந்ததா? – வேம்படியான்

நம் நாட்டின் காஷ்மீரில் நம் உரிமையை க்ஷரத்து 370ஐ ரத்து செய்வதன் மூலமாக உலகறிய உறக்கச் சொல்லியுள்ளோம். அதோடு நிறுத்தாமல் நம் உள்துறை அமைச்சர் அமீத் ஷாவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அநியாயமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதியையும் மீட்போம் என்று சொன்னாலும் சொன்னார்கள்,  பாக் அரசு நம்மோடு முறைத்துக்கொண்டு நம் நாட்டோடு வணிக உறவுகளையும் வெட்டியது.

இம்ரான் தலைமையிலான பாக் அரசு வெளிநாட்டு அதிபர்கள், பிரதமர்கள் என்று ஒவ்வொரு வாசற் படியையும் கதவையும் பார்த்துப் பார்த்து தட்டிக் கொண்டுள்ளார்கள். சீனாவும் இங்கிலாந்தும் தவிர இவர்களுக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை. அதிலும் இங்கிலாந்து நாடே பிரெக்ஸிட் காரணமாய் தவியாய்த் தவித்துக் கொண்டுள்ளார்கள், அப்படி இருக்கையில் பாக்கிற்கு அவர்கள் பெரிதாக என்ன உதவி செய்துவிட முடியும்?

அமெரிக்காவும் பொருளாதார உதவி செய்வதற்கு கையை விரித்துவிட்டது. அதனால் பாக் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி பெரும் அல்லலில் ஆழ்ந்துள்ளது. இதெல்லாம் தேவையா பாக் அரசுக்கு?

இருநாட்டு வர்த்தக உறவை நிறுத்தியதால் நஷ்டம் யாருக்கு? ஐயமின்றி பாகிஸ்தானிற்கே !

இப்படி இருக்கையில் ஒரு மாதத்துக்குள்ளாகவே , பாக் அரசுக்கு அவர்கள் நாட்டு வாணிபர்களிடம் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் பெரும் அழுத்தம் வந்து கொண்டு இருக்கிறது. பாக் பல நாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதிகளின் அளவு பெரும்பாலும் குறைந்து விட்டது. ஆனால் ஒரே விதி விலக்கு நம் நாட்டு பொருள் இறக்குமதிகள்.

ஏனைய பொருட்கள் இல்லையென்றால் எப்படியோ சமாளிக்கலாம்,  ஆனால், மருந்துகள் குறிப்பாக உயிர் காக்கும் மருந்துகள் (கான்சர், எலும்புருக்கி, இதயம் தொடர்பான நோய்களுக்கு தீர்வான ) விஷயத்தில் வீம்பு பிடித்து என்ன பயன்? அந்நாட்டு வணிகர்களும் பொது மக்களும் நன்கறிவார்கள்- பாரதத்தில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகள் தரமானவை ஆனால் விலை குறைந்தவை. ஆகவே தான் பல தரப்பினரும் பாரதத்துடன் வர்த்தக உறவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

பாக் அரசு இனிமேலாவது கண்திறந்து பார்த்து உண்மையை புரிந்து கொள்ளவேண்டும்,  தம் நாட்டுமக்களின் நியாயமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.

சுட்ட பின்பு நெருப்பு, பட்ட பின்பு ஞானி – கண்ணதாசன்