இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்

இந்தியா எப்போதும் கட்டுப்பாடுடனே இருந்து வருகிறது. நாம் தாக்கப்பட்டால், நம்மைத் தாக்கியவர்கள் மறக்க முடியாத வகையில் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை அடுத்து இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையாகப் பேசி வரும் நிலையில், வெங்கய்ய நாயுடு இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியா தனது இறையாண்மையை அமைதியான முறைகளில் பாதுகாத்து வருகிறது. அதேபோல், அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கு எப்போதும் பெரும் மதிப்பளித்து வருகிறது. ஆனால், இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

கடந்த சில காலமாக இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், நாம் கட்டுப்பாடுடனே இருந்து வருகிறோம். எதேனும் ஒரு நாடு இந்தியாவைத் தாக்கினால், அந்த நாடு தனது காலம் முழுவதும் அதை மறக்க முடியாத வகையில் தகுந்த பதிலடியை இந்தியா கொடுக்கும். இந்தியாவுக்கு ஆத்திரமூட்டுபவர்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என நினைக்கும் இந்தியா, எவ்வாறு மற்ற நாடுகளுடன் சண்டையிடும்? பிரச்னைகள் குறித்து கலந்தாலோசித்து, விவாதித்து முடிவுகள் எடுப்பதே முன்னேறிச் செல்வதற்கான நடவடிக்கையாகும். நல்லிணக்கத்தோடும், அமைதியோடும் வாழ விரும்பினால் ஒன்றாக உழைத்து, ஒன்றாக முன்னேறுவதன் மூலமே ஒற்றுமையுடன் வாழ முடியும். இதுவே இந்தியாவின் தத்துவம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார்.