காந்திஜியும் நேதாஜியும்

இந்த நாடு சுதந்திரம் பெற உழைத்தவர்களுள் தலையாய இருவராக மகாத்மா காந்திஜியையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸையும் சொல்லலாம். இருவரின் வழிமுறைகள் வேறானவையாக இருந்தபோதும், இலக்கு ஒன்றாகவே இருந்தது. எனினும், இலக்கை நோக்கிய அரசியல் பயணத்தில் நேதாஜி காந்திஜியைவிட ஒருபடி மேலானவராகவே இருந்தார்.

காந்திஜியும் நேதாஜியும் ஒத்த கருத்துடன் செயல்பட்டிருந்தால் சுதந்திர இந்தியா வேறு வடிவில் எழுந்திருக்கும் என்பதே சரித்திர ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. நமது துரதிர்ஷ்டம், காந்திஜியும் நேதாஜியும் துவக்கக் காலம் (1922) முதலே உடன்பாடும் முரண்பாடும் கொண்டவர்களாகவே இயங்கி வந்துள்ளனர். அந்த இடைவெளியில்தான் ஜவஹர்லால் நேரு உள்புகுந்து காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றினார்; பின்னாளில், பிரதமர் ஆன பிறகு காந்திஜியையே செல்லாக்காசாக்கினர்.

மாறாக, யுத்தமுனையில் நின்றபோதும் சிங்கப்பூரில் இருந்தபடியே வானொலியில் (1945) உரையாற்றிய நேதாஜி, மகாத்மா காந்தியை தங்கள் வழிகாட்டியாகக் குறிப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்திருப்பதைக் கேட்க முடியும்.

இந்த வேறுபாடுகளுக்குக் காரணம், காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய, இன்றும் நிலவும் குழு மனப்பான்மை தான் எனில் மிகையில்லை. ஆங்கிலேயரால் துவங்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்குள் திலகர் காலடி எடுத்துவைத்த பிறகே அக்கட்சி விடுதலைக்காக தீர்மானம் இயற்றத் துவங்கியது. அப்போதே திலகருக்கு எதிராக கோகலே போன்ற மிதவாதிகள் உருவாகினர். மிதவாதிகள் என்பவர்கள் ஆடசியாளர்களைச் சார்ந்திருப்பவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

திலகர் சகாப்தம் நிறைவடையும் வேளையில், கோகலேவை குருவாக வரித்துக்கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய அரசியலில் நுழைகிறார். 1915லேயே தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தாலும் 1920 வரை அவர் தீவிர அரசியலில் இறங்கவில்லை. 1920ல் திலகர் மறைந்த பிறகே காந்தியின் அரசியல் வேகம் பெற்றது. 1924ல் அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் தான் கொல்கத்தாவில் சுபாஷ் சந்திரபோஸ் விடுதலைப்போரில் குதித்தார். அவரது அரசியல் குரு, சித்தரஞ்சன் தாஸ். அவரோ காந்தியையின் அஹிம்சையைக் கடுமையாக எதிர்த்தவர்.

1922ல் அறிவிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தை சௌரிசௌரா சம்பவத்தைக் காரணமாகக் காட்டி தன்னிச்சையாக நிறுத்தினார் காந்தி. அதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சிக்குளேயே ‘சுயராஜ்யக் கட்சி’யை நிறுவினார் சித்தரஞ்சன் தாஸ். ஏனெனில் அவரது கருத்துகளால் கட்சிக்குள் காந்தியின் செல்வாக்கை மீறி வெல்ல முடியவில்லை. காந்திக்கு பதிலடி கொடுப்பதற்காகவே ‘சுயராஜ்யா’ என்ற பத்திரிகையை துவக்கிய சித்தரஞ்சன் தாஸ், அதன் நிர்வாகப் பொறுப்பை சுபாஸிடம் ஒப்படைத்தார். இங்குதான் காந்தி- போஸ் முரண்பாடு துவங்குகிறது.

ஆங்கிலேயர்கள் தங்களை கடுமையாக எதிர்த்தோரை கொடும் சட்டங்களால் சிறையில் தள்ளி பொதுவாழ்விலிருந்து அகற்றினர். அதேசமயம், மிதமாக எதிர்ப்போருக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்தனர். அதன்மூலமாகவே காந்தி, நேரு, படேல் போன்ற மிதவாதிகள் அரசியல் சூழலில் தொடர்ந்து போராட முடிந்தது. அவர்களே மக்களின் மனதில் நிற்கவும் முடிந்தது. அவர்களது அணியின் தலைவராக காந்தி விளங்கினார்.

மாறாக, திலகர், அரவிந்தர், சாவர்க்கர் போன்ற தீவிரவாதிகளின் பக்கம் சுபாஷ் நின்றார். இது தனிப்பட்ட ஆளுமைகளிடையிலான மோதல் அல்ல; நாட்டின் சுதந்திரத்தை அடையும் வழிமுறையின் அடிப்படையிலான கொள்கை மோதல். இந்த முரண் காந்திஜி- நேதாஜியின் இறுதிகாலம் வரை தொடர்ந்தது.

1928 ல் கொல்கத்தாவில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்தியை எதிர்த்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கொல்கத்தா மாகாணத் தலைவரான போஸ் எழுந்தார்;  காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். காந்தி- போஸ் மோதல் மேலும் வலுவடைந்தது. போஸின் முடிவை அப்போது நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து காங்கிரஸில் இருந்தபடி  ‘விடுதலைச் சங்கம்’ என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தினர். (பின்னாளில் காங்கிரஸ் கட்சிக்குள் நேதாஜியின் செல்வாக்கு சரிந்தபோது நேரு காந்திஜியின் தலைமையை ஏற்றார்).

காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே போஸ் எதிர்த்த்தால், காரிய கமிட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அவரைப் போல சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சீனிவாச ஐயங்காரும்  நீக்கப்பட்டார். உடனே போஸ், ”காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது; அங்கு எங்களுக்கு வேலையில்லை’’ எனக் கட்சியிலிருந்து விலகி, சீனிவாசரைத் தலைவராகக் கொண்டு ‘காங்கிரஸ் ஜனநாயக கட்சி’யைத் தொடங்கினார்.

அடுத்த பத்தாண்டுகளில் காந்தி காங்கிரஸ் கட்சியின் தன்னிகரற்ற தலைவர் ஆகியிருந்தார். அக்கட்சியின் உறுப்பினர் ஆகாமலே கட்சிக்குள் செல்வாக்கு செலுத்துபவராக அவர் விளங்கினார். அவரது தன்னிச்சையான போக்கிற்கு எதிர்ப்பும் கட்சிக்குள் நிலவியது. அந்த அதிருப்தியாளர்களின் குவிமுனையாக நேதாஜி இருந்தார்.

1939 இல் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திர பிரசாத்தையும், ஜவஹர்லால் நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதாராமையாவை போட்டியாளராக நிறுத்தினார். ஆனால், மகாத்மாவின் செல்வாக்கி மீறி, 1,580 வாக்குகளுடன் நேதாஜி வெற்றிபெற்றார்.

அந்தத் தேர்தல் கட்சிக்குள் நடைபெற்ற ஜனநாயகரீதியான தேர்தல். ஆனால், “சீதாராமையாவின் தோல்வி என்னுடைய தோல்வி’’ என்று கூறி  உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார் காந்திஜி. அதனால், அவரைச் சமாதானப்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் நேதாஜி. இது தனது தனிப்பட்ட வெறுப்புக்காக உள்கட்சி ஜனநாயகத்தை காந்திஜியே சிதைத்த வரலாறு. காங்கிரஸ் கட்சிக்குள் இன்றும் தொடரும் பல ஜனநாயக விரோத விபரீதங்களுக்கு வித்திட்டவர் காந்திஜிதான்.

அதன்பிறகு நேதாஜி 1939 இல் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார். தனது கட்சி காங்கிரஸ் பேரியக்கத்தின் களப் போரில் முன்னணித் தளகர்த்தராக இருக்கும் என்று அவர் சொன்னார். அதன் அகில இந்திய தலைவராக நேதாஜியும், தமிழகத் தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் பொறுப்பேற்றனர். ஆனால், பார்வர்டு பிளாக் கட்சியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பகையாளிகளாகவே நடத்தினர். அதனால்தான் இன்று அக்கட்சி இடதுசாரியாக மாறி இருக்கிறது.

ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரை லண்டனில் சுட்டுக் கொன்றார் பாரத இளைஞர் உத்தம் சிங் (1940). அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ். காந்திக்கும் போஸுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது.

1941இல் கொல்கத்தாவில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேதாஜி அங்கிருந்து தப்பி, ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனி சென்று, அங்கிருந்து ஜப்பான் சென்றது வீர வரலாறு. அப்போது நாடு முழுவதும் வீரநாயகன் எனப் போற்றப்பட்டார் நேதாஜி. எனவேதான் 1942இல் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை தீவிரமாக முன்னேடுக்க வேண்டிய கட்டாயம் காந்திஜிக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் சிறைப்படுத்தப்பட்டார்.

வெள்நாடு சென்ற நேதாஜி அங்கு போர்ப்படை திரட்டியதும், ‘தில்லி சலோ’ முழக்கத்துடன்’ இந்தியாவை துப்பாக்கி முனையில் விடுவிக்கப் போர் நடத்தியதும், விதிவசமாக அதில் தோல்வியுற்றதும் தனி வரலாறு. இரண்டாம் உலகப் போரின் முடிவே நேதாஜியின் தோல்விக்கு வித்திட்டது. அந்தப் போரில் ஜப்பான் வென்றிருந்தால் சுதந்திர இந்திய ராணுவமும் ஆங்கிலேயரை வென்று நாட்டை மீட்டிருக்கும். அதேசமயம், இந்தியாவை விட்டு ஆங்கிலேயர் வெளியேற வேண்டியதன் அவசரத்தையும் வெளிப்படுத்தியது. விடுதலைப் போரும் வேகம் பெற்றிருந்தது. அதனால்தான் நாம் 1947ல் சுதந்திரம் அடைந்தோம்.

விடுதலை சும்மா வரவில்லை; அதை நாம் போராடித்தான் பெற்றோம். அதேசமயம், மிதவாதிகளின் மென்மையான அணுகுமுறைகள் மட்டுமே அதற்குக் காரணம் அல்ல. திலகர் முதல் நேதாஜி வரையிலான தீவிரக் கொள்கை உடைய தேசியவாதிகளின் பங்களிப்பே விடுதலைப் போரை வழிநடத்தியது. அதை மறைக்க முயலும் அனைவரும் பட்டாபி சீதாராமையாவின் ஆதரவாளர்களாகத் தான் இருக்க முடியும்.