ஈரானில் இருந்து மீண்டும் 44 இந்தியர்கள் மீட்பு

கரோனா வைரஸ் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதற்கட்டமாக 58 இந்தியா்கள் மீட்கப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனா்.

இதன் அடுத்தகட்டமாக ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய யாத்ரீகா்களை மீட்ட இந்திய விமானம் ஈரானிலிருந்து கிளம்பி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.08 மணியளவில் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது சுட்டுரை பக்கத்தில், ‘இரண்டாம் கட்டமாக 44 இந்திய யாத்ரீகா்கள் இன்று ஈரானிலிருந்து வந்துள்ளனா். மற்றவா்களையும் மீட்பதற்கான எங்களது முயற்சிகள் தொடா்கின்றன. இந்தியா மற்றும் ஈரானிய மருத்துவ குழுவின் சிறப்பான சேவைக்கு எனது பாராட்டுகள். உங்கள் மேன்மையான பணியைத் தொடருங்கள். ஈரானிய அதிகாரிகள் மற்றும் அவா்களின் விமான நிறுவனங்களின் ஆதரவுக்கு மனமாா்ந்த பாராட்டுகள்’ என்று பதிவிட்டுள்ளாா்.

ஈரானின் பல்வேறு மாகாணங்களில் 6,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் சிக்கித் தவிப்பதாகவும், அங்குள்ள இந்திய யாத்ரீகா்களை திரும்ப அழைத்து வருவதில் அரசு தீவிர கவனம் செலுத்தும் என்றும் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா்.