இளம் வயது ஐ.பி.எஸ்

குஜராத் மாநிலம் பாலன்புரின் கனோடர் கிராமத்தை சேர்ந்தவர் ஹசன் சபீன். இவரது பெற்றோர் முஸ்தபா ஹசன் மற்றும் நசீமா பானு. இருவரும், வைர நகை தொழிலாளர்களாக உள்ளனர். அவர்கள் சம்பாதிப்பது, குடும்பத்தின் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இதனால், ஷபின் படிக்க சிரமப்பட்டுள்ளார். மகனின் படிப்புக்கு உதவும் வகையில், நசீமாபானு, உள்ளூர் உணவகங்களுக்கு சப்பாத்தி செய்து கொடுத்து பணம்
சம்பாதித்துள்ளார். அப்பகுதியில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சபின் படிப்பிற்கு உதவி செய்துள்ளனர்.

இவர், இளம் வயது முதல், சமூகத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். கடந்த 2018 ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில், அகில இந்திய அளவில் 570வது ரேங்க் பெற்று ஐ.பி.எஸ்.,ஆக தேர்வானார். இருப்பினும் ஐ.ஏ.எஸ்.,ஆக வேண்டும் என விரும்பியுள்ளார். இவர் வரும் 23 ல் ஜாம்நகர் போலீஸ் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ளார். இது தொடர்பாக ஹசன் சபின் கூறுகையில், மீண்டும் தேர்வு எழுதினேன். ஆனால், வெற்றி பெற முடியவில்லை. இதனால், ஐபிஎஸ்., பணியில் தொடர உள்ளேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாட்டிற்கு சேவை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.